'மைக்ரோ மேனேஜ்மென்ட்' முறையில் அனைத்துக் கோயில்களும் நேரடி கண்காணிப்பு: இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் அதிரடி உறுதி!
Temples to be Monitored via Micro-Managemen HR CE Minister S Ramesh Assures Corruption Free Governance
திருச்சியில் இன்று நடைபெற்ற பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதயவிழாவில் பங்கேற்று, அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தவெக அரசின் மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கை குறித்தும், ஆன்மீகத் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள அதிரடி நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்தும் அவர் விரிவாகப் பேசினார்.
கொள்கைத் தலைவர்களாகப் பெரியார், அம்பேத்கர்:
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் எஸ்.ரமேஷ் பேசியதாவது: பாகுபாடற்ற அரசியல்: "எங்களது கொள்கை மதச்சார்பற்ற சமூகநீதி ஆகும். சாதி, பணம், இனம், மொழி, பாலினம் என எந்தவித பாகுபாடும் இல்லாத சமத்துவ ஆட்சியை எங்களது தலைவர் சி. ஜோசப் விஜய் முன்னிறுத்தியுள்ளார். தந்தை பெரியார் மற்றும் சட்டமேதை அம்பேத்கரை எங்களது கொள்கைத் தலைவர்களாக ஏற்றுக்கொண்டு நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
விஜய்க்காகவே வாக்கு: மக்கள் எங்களைச் சாதி, மத அடிப்படையில் பார்க்கவில்லை. மக்கள் எங்களது தலைவர் விஜய்க்காக மட்டுமே வாக்களித்துள்ளார்கள். சேவை செய்யும் மனப்பான்மையைப் பார்த்துதான் தலைவர் எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளார்."
'மைக்ரோ மேனேஜ்மென்ட்' மற்றும் ஊழல் ஒழிப்பு:
கோயில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரப் புதிய உத்திகள் கையாளப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
நேரடி கண்காணிப்பு: "இந்து சமய அறநிலையத்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் முதல் கீழ்மட்ட ஊழியர்கள் வரை எவரும் எவ்வித ஊழலிலோ அல்லது அதிகார துஷ்பிரயோகத்திலோ ஈடுபட இடமே கிடையாது. 'மைக்ரோ மேனேஜ்மென்ட்' (Micro-management) எனப்படும் நுண் மேலாண்மை முறை மூலம் தமிழகத்தின் அனைத்துக் கோயில்களும் எனது நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும். முந்தைய முறைகேடுகள் அனைத்தும் முழுமையாகச் சரிசெய்யப்படும்."
ஆக்கிரமிப்பு மீட்பும் பக்தர்களுக்கான வசதிகளும்:
சொத்துக்கள் மீட்பு: ஆன்மீகத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துக்கள் மீதான ஆக்கிரமிப்புகள் அனைத்தும் ஒவ்வொன்றாக ஆய்வு செய்யப்பட்டு, சட்டப்பூர்வமாக மீட்கப்பட்டு மக்களுக்குப் பயனுள்ள வகையில் மாற்றப்படும்.
நெரிசலற்ற தரிசனம்: கோயிலுக்கு வரும் பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி, நீண்ட நேரம் காத்திருக்காமல் சுவாமி தரிசனம் செய்யத் தேவையான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அனைத்துக் கோயில்களிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
அடிமனைப் பிரச்சினை: ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்கோவில் பகுதிகளில் நீண்ட நாட்களாக நிலவி வரும் அடிமனைப் பிரச்சினை தொடர்பாக இன்று மாலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசர ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. அதன் பின்னர் இதற்கான முறையான தீர்வு அறிவிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
English Summary
Temples to be Monitored via Micro-Managemen HR CE Minister S Ramesh Assures Corruption Free Governance