காவிரி விவகாரம்; தமிழக மக்களின் உரிமைகள் நிலைநாட்ட அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; பாஜக வினோஜ் பி. செல்வம் ஆதங்கம்..!
Vinoj P Selvam says the government has not taken any action to uphold the rights of the people of Tamil Nadu
''தமிழக மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவதையும், கர்நாடகாவிலிருந்து தண்ணீர் உடனடியாக விடுவிக்கப்படுவதையும் உறுதி செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது'' என்று தமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் பெங்களூருவில் தன்னை சந்திக்க இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் முதல் அறிவித்தார். பின்னர் தற்போதைக்கு இந்தச் சந்திப்பு வேண்டாம் என தான் கோரிக்கை வைத்ததாகவும் அதனை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஏற்றுக் கொண்டதாகவும் அறிவித்துள்ளார்.
இந்த சூழலில், கர்நாடகாவில் தற்போது தொடர்ந்து கன மழை பெய்துவருகிறது. இதனால் அங்கு அணைகளில் நீரை தேக்கிவைக்க முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக, உபரி நீரை கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது தமிழ்நாட்டில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி. செல்வம் இது குறித்து கூறியதாவது;
தமிழக மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்படுவதையும், கர்நாடகாவிலிருந்து தண்ணீர் உடனடியாக விடுவிக்கப்படுவதையும், டெல்டா பகுதி விவசாயிகளுக்குத் தண்ணீர் விரைவில் வந்து சேரும் என்ற நற்செய்தி கிடைப்பதையும் உறுதி செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த ஏமாற்றமளிக்கிறதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தற்போது கர்நாடகாவில் இருந்து நீர் திறக்கப்பட்டு, அது விரைவில் டெல்டாவை வந்தடையும் எனும் நற்செய்தி வந்திருக்கிறது. ஆனால் முதலமைச்சரோ, ட்ரோன் மூலம் ஆய்வு செய்வதை படம் எடுப்பதிலும், சிவப்பு கம்பள வரவேற்புகளிலும் மும்முரமாக இருந்து வருகிறதாக விமர்சித்துள்ளார். விவசாயிகளுக்குத் தேவையான தண்ணீரையும், எந்தச் சூழலிலும் மாநிலத்தின் நீர் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படாமல் இருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், கர்நாடகா தனது சொந்த நலன்களிலேயே கவனம் செலுத்துகிறதாகவும், தமிழகத்தில் ஆட்சியில் உள்ள கட்சி, சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, இதன் முக்கியத்துவத்தை விளக்கி, தீர்மானம் நிறைவேற்றி, காவிரி மேலாண்மை வாரியத்தில் வலுவாக வாதிட்டிருக்க வேண்டும் அல்லது நீதிமன்றத்தை நாடியாவது நமக்கான நீர் பங்கை உறுதி செய்திருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
English Summary
Vinoj P Selvam says the government has not taken any action to uphold the rights of the people of Tamil Nadu