வெள்ளக்காடாகியுள்ள கேரளாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட 08 பேர் பலி; சபரிமலை பயணத்தை மறு பரிசீலனை செய்ய கோரிக்கை..!
8 people including a woman from Tamil Nadu die in flood hit Kerala
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கேரளாவில் முக்கிய நீர்நிலைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட்டயம், இடுக்கி, மலப்புரம் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் கனமழையைத் தொடர்ந்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 08 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
கன மழையினால் பத்தனம்திட்டாவில் குடியிருப்பு பகுதிகளில் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில் ஏராளமான வீடுகள் மற்றும் கடைகள் நீரில் மூழ்கியுள்ளன. செங்கன்னூர் - ஆரன்முலா சாலையின் சில பகுதிகளில் வெள்ள நீர் வடியாததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, ஆலப்புழா மாவட்டத்தில் பம்பா, அச்சன்கோவில் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. எர்ணாகுளம் அருகே கனமழையால் அங்கன்வாடி கட்டடம் சரிந்தது.
கண்ணூர் மாவட்டம் ஸ்ரீகண்டபுரத்தில் இரவில் பெய்த மழையால் சாலைகள் வெள்ளக்காடாகியுள்ளன. மலப்புரம் மாவட்டம் முழுவதும் கனமழையால் சாலியார் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இடுக்கியில் கனமழை காரணமாக மலங்கரா அணை முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாலக்காடு கிழக்குஞ்சேரி பாலக்குழி நீர்வீழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில், ஒரு இளைஞர் மீட்கப்பட்டுள்ளார். வெள்ளத்தில் மாயமான இளம் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே, கேரளாவில் கனமழை தொடர்வதால், சபரிமலை பயணத்தை மறு பரிசீலனை செய்ய பக்தர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. கனமழை, வெள்ளப்பெருக்கு காரணமாக பம்பையில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
8 people including a woman from Tamil Nadu die in flood hit Kerala