சட்டசபையில் வன்மத்தை கக்கிய முதலமைச்சர் சொன்னது அனைத்தும் பொய்... த.வெ.க. தலைவர் விஜய்!
Tamilaga Vettri Kazhagam Vijay speech
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில், தமிழக வெற்றிக்கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும், கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் கொள்கைத் தலைவர்களுக்கு விஜய் மரியாதை செலுத்தி, கொள்கைப் பாடல் ஒலிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் உரையாற்றிய கட்சித் தலைவர் விஜய், “நம் மீது நிகழ்ந்த துயரம் சொல்ல முடியாதது. குடும்ப உறவுகளை இழந்த வேதனையில் இத்தனை நாட்களாக அமைதியாக இருந்தோம். ஆனால், அதே நேரத்தில் வன்ம அரசியல் மற்றும் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகள் நம்மீது சுமத்தப்பட்டன,” என்று தொடங்கினார்.
அவர் மேலும், “கரூர் விவகாரம் குறித்து சட்டசபையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் நம் மீது வன்மத்தை கக்கினார். நான் அதற்கு நாகரிகமான பதிலை வழங்க விரும்புகிறேன். ‘அரசியல் செய்யவில்லை’ என கூறி, அரசியலையே வன்மத்துடன் நடத்தும் ஒருவர் அவர்,” என்றார்.
விஜய் தொடர்ந்தார்: “கரூர் சம்பவத்தின் பின் தனிநபர் ஆணையம் அமைத்ததாகச் சொன்ன அரசு, அதனை தலையில் குட்டு வைத்து வீட்டிற்கு அனுப்பிவிட்டது. பின்னர் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். இது நீதியின்மைக்கு எடுத்துக்காட்டு. தமிழக அரசின் தலையில் உச்சநீதிமன்றமே ஓங்கி குட்டியுள்ளது,” என்றும் தெரிவித்தார்.
“50 ஆண்டுகளாக பொதுவாழ்வில் உள்ள முதலமைச்சர் கூறியது வடிகட்டிய பொய் என நான் அல்ல, உச்சநீதிமன்றமே கூறியுள்ளது. அரசியல் காழ்ப்புடன், நேர்மை இல்லாமல் செயல்படும் அரசுக்கு எதிராக நம் போராட்டம் சட்டம் மற்றும் சத்தியத்தின் வழியிலேயே தொடரும்,” என வலியுறுத்தினார்.
English Summary
Tamilaga Vettri Kazhagam Vijay speech