தமிழ்நாடு வழிகாட்டி.. இந்தியா பின்பற்றுகிறது! - திராவிட மாடல் திட்டங்களின் உலகளாவிய தாக்கத்தை விளக்கிய முதலமைச்சர்
Tamil Nadu leads way India follows CM explained global impact Dravidian model schemes
சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு நாள் கருத்தரங்கினைத் தொடக்கி வைத்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'திராவிட மாடல்' ஆட்சியின் சாதனைகளையும், தமிழகத்தின் அசுர வளர்ச்சியையும் புள்ளிவிவரங்களுடன் பட்டியலிட்டார்.
சமூகநீதி, சமத்துவம் மற்றும் மக்கள் நலன் ஆகிய மூன்று தூண்களின் மீதுதான் தி.மு.க. அரசு இயங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், விளிம்புநிலை மக்கள் முதல் நகரவாசிகள் வரை எவரும் விடுபட்டுவிடாத வகையில் திட்டங்கள் பார்த்துப் பார்த்துச் செதுக்கப்படுவதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

மத்திய அரசின் பல்வேறு நிதி நெருக்கடிகளையும் முட்டுக்கட்டைகளையும் தாண்டி, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். குறிப்பாக, இந்தியாவிலேயே எந்த மாநிலமும் எட்ட முடியாத 11.8% பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு எட்டிப் பிடித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
மூன்றாம் நிலை நகரங்கள் கூட இன்று உள்கட்டமைப்பில் தன்னிறைவு பெற்றுள்ளது திராவிட மாடல் அரசின் சமச்சீர் வளர்ச்சிக்குச் சான்று என்று அவர் விவரித்தார்.
மேலும், மகளிருக்கான 'விடியல் பயணம்' மற்றும் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' ஆகிய வாக்குறுதிகளைச் சொன்னபடியே நிறைவேற்றியதோடு, இந்தியத் துணைக்கண்டத்திற்கே முன்னோடியாகக் 'காலை உணவுத் திட்டத்தைச்' செயல்படுத்தி வருவதாக அவர் முழங்கினார்.
ஆன்மீக ரீதியாகவும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை மிஞ்சும் வகையில், தமிழகத்தில் இதுவரை 4,000 கோவில்களுக்குக் குடமுழுக்கு நடத்திச் சாதனை படைத்துள்ளதை அவர் அழுத்தமாகப் பதிவு செய்தார்.
திராவிட மாடல் திட்டங்களை மற்ற மாநிலங்கள் அப்படியே பின்பற்றுவதே இந்த ஆட்சியின் வெற்றிக்குக் கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம் எனத் தனது உரையில் அவர் சுருக்கமாகக் குறிப்பிட்டார்.
English Summary
Tamil Nadu leads way India follows CM explained global impact Dravidian model schemes