'கர்நாடகாவிடம் பேசி பயனில்லை'...!மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே ஒரே தீர்வு...! - அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
Talking Karnataka useless Supreme Court only solution Meghadhadhu Dam issue Minister Nirmal Kumar takes action
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், காவிரி நீர் பிரச்சினை, மத்திய அரசின் நிலைப்பாடு, கர்நாடக அரசின் அணுகுமுறை மற்றும் அனைத்துக் கட்சி கூட்டம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது,"காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு தற்போது இருக்கும் முக்கியமான சட்ட வாய்ப்பு உச்சநீதிமன்றத்தை அணுகுவதுதான். இந்த பிரச்சினையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கே முழுமையான புரிதல் இல்லை.

தமிழகத்தின் நலனுக்கு சாதகமாக செயல்படுவதற்குப் பதிலாக, கர்நாடகாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாகவே அவர் கருத்து தெரிவித்து வருகிறார். இது தமிழக மக்களின் நலனுக்கு எதிரான அணுகுமுறையாகவே பார்க்கப்படுகிறது.காவிரி விவகாரத்தில் மாநில அரசுகளின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பல அம்சங்கள் உள்ளன. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசிடமே உள்ளது.
ஆனால் கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்கக்கூடாது என்ற ஒரே நிலைப்பாட்டில்தான் செயல்பட்டு வருகின்றனர்.இந்தச் சூழலில், தமிழகத்தின் உரிமையை சட்ட ரீதியாக நிலைநாட்ட உச்சநீதிமன்றத்தை நாடுவதே தற்போதைய ஒரே வழியாக உள்ளது. தமிழக மக்களின் நலனை பாதுகாக்க சட்டரீதியாக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், ராகுல் காந்தி தலையிட்டு ஏன் கருத்து தெரிவிக்கவில்லை என்று அன்புமணி கேள்வி எழுப்பியிருப்பது குறித்து அமைச்சரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், "இதே அன்புமணி ராமதாஸ் கடந்த காலத்தில் காங்கிரஸ் கூட்டணியில்தான் இருந்தார். அப்போது காவிரி தொடர்பான அரசிதழ் அறிவிப்பு வெளியானபோது அவர் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதையும் விளக்க வேண்டும்.தற்போதைய சூழலில் இது இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான நீர் உரிமை தொடர்பான சட்டப் பிரச்சினையாக உள்ளது.
எனவே, இதற்கான தீர்வை உச்சநீதிமன்றம் மூலமே பெற முடியும். அதுவே நடைமுறைக்கு ஏற்ற வழியாகும்" என்றார்.அனைத்துக் கட்சி கூட்டம் எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "அந்த விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் உரிய நேரத்தில் முடிவெடுத்து அறிவிப்பார்" என்று தெரிவித்தார்.
English Summary
Talking Karnataka useless Supreme Court only solution Meghadhadhu Dam issue Minister Nirmal Kumar takes action