தமிழக அரசியல் களத்தில் திடீர் சலசலப்பு...! திமுகவில் இணைகிறாரா செல்வப்பெருந்தகை...? - கூட்டணிக் கட்சிகளுக்குள் என்ன நடக்கிறது...?
Sudden uproar Tamil Nadu political arena Is Selvapperundhagai joining DMK What happening alliance parties
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமைப் பொறுப்பில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நேற்று அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதலுடன், பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டார்.

பாரம்பரிய காங்கிரஸ் குடும்ப பின்னணியில் இருந்து வந்துள்ள மாணிக்கம் தாகூரின் நியமனம் கட்சிக்குள் புதிய அரசியல் பரபரப்பை உருவாக்கியுள்ளது.இதற்கிடையில், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகையின் அடுத்த அரசியல் நகர்வு குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
திமுகவுடன் நீண்ட காலமாக நெருக்கமான அணுகுமுறையை கடைப்பிடித்து வந்த அவர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்த காலகட்டங்களில் பல்வேறு விவகாரங்களில் திமுகவிற்கு உறுதியான ஆதரவு குரல் எழுப்பியவர்.
அரசியல் சவால்கள் எழுந்த நேரங்களிலும் கூட, திமுக நிர்வாகிகளை விட முன்கூட்டியே ஆதரவு தெரிவித்து தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி உருவாக முக்கிய பங்காற்றியவர்களில் செல்வப்பெருந்தகையும் ஒருவர் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், கூட்டணியில் நீடித்தபடியே திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்தது அரசியல் அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
குறிப்பாக, முதல்-அமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் நடந்துகொண்ட விதம் அநாகரிகமானது என அவர் கடுமையாக விமர்சித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வாறு தொடர்ந்து திமுக ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வந்த செல்வப்பெருந்தகை, விரைவில் தனது ஆதரவாளர்கள் மற்றும் சில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் திமுகவில் இணையக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவல் தமிழ்நாட்டு அரசியலில் புதிய திருப்பத்தை உருவாக்குமா...? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
Sudden uproar Tamil Nadu political arena Is Selvapperundhagai joining DMK What happening alliance parties