மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் சுவேந்து அதிகாரியின் ஆலோசகராக சுப்ரதா குப்தா நியமனம்..!
Subrata Gupta appointed as Advisor to West Bengals new Chief Minister
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டமன்றத்தில் பாஜக 207 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது.(தேர்தல் விதிமீறல் புகார் காரணமாக ஃபால்டா சட்டமன்றத் தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது)
இதில் மம்தா பானர்ஜியின் கோட்டையாகக் கருதப்பட்ட பபானிபூர் தொகுதியிலேயே அவரை வீழ்த்திய சுவேந்து அதிகாரி வெற்றிபெற்றுள்ளதோடு, மாநிலத்தின் முதலமைச்சராக இன்று பதவியேற்றுள்ளார். அதன்படி, மேற்குவங்கத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது.
இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் சுவேந்து அதிகாரியின் ஆலோசகராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சுப்ரதா குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். இது மேற்கு வங்கத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. புதிய அரசு, முதலமைச்சர் அலுவலகத்தையும் முக்கிய நிர்வாகப் பதவிகளையும் மறுசீரமைத்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யார் இந்த சுப்ரதா குப்தா..?
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக நடைபெற்ற சிறப்பு வாக்காளர் பட்டியல் (SIR) பணிக்காக, தேர்தல் ஆணையத்தால் சிறப்புப் பட்டியல் கண்காணிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டவர்தான் இந்த சுப்ரதா குப்தா. அவருடைய நீண்டகால அரசு நிர்வாக அனுபவம், கொள்கை ஒருங்கிணைப்பு மற்றும் ஆளுகை தொடர்பான விஷயங்களில் அரசுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில் அம்மாநில முதல்வராக பதவியேற்றுள்ள பாஜகவின் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர் (PA) சந்திரநாத் ரத் (மே 6) இரவு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
English Summary
Subrata Gupta appointed as Advisor to West Bengals new Chief Minister