தவெகவில் நிர்வாகிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்! நிர்வாகிகளுக்கே சென்சார்! புதிய தலைகள் அமைதிக்கு இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) சமீப காலமாக இணைந்துள்ள மாற்றுக் கட்சி நிர்வாகிகள், பேச்சாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, டெல்லியில் நடைபெறும் சிபிஐ விசாரணை மற்றும் விஜயின் கடைசி படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பாக, விஜய் தவிர வேறு யாரும் பொதுவெளியில் பேசக்கூடாது என்று கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியபோது, கட்சியில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் இல்லை, தொலைக்காட்சி விவாதங்களில் பேசும் திறன் கொண்ட பேச்சாளர்கள் இல்லை என்ற விமர்சனங்கள் பரவலாக எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தவெகவில் இணைக்கப்பட்டனர். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

கட்சியில் இணைந்த உடனேயே நாஞ்சில் சம்பத் பல ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டிகள் அளித்தார். அதேபோல் செங்கோட்டையனின் பேச்சுகளும் ஊடகங்களில் பரவலாக கவனம் பெற்றன. ஆனால், கரூர் சம்பவம் தொடர்பாக விஜய் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதும், ‘ஜனநாயகன்’ படம் சென்சார் சிக்கலால் வெளியாகாததும், அரசியல் ரீதியான சர்ச்சைகளை ஏற்படுத்தின. சில தலைவர்கள் இதை பாஜகவின் அரசியல் சதி என விமர்சித்ததால், விவகாரம் மேலும் சூடுபிடித்தது.

இந்தச் சூழலில், “எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றக் கூடாது” என்ற அணுகுமுறையுடன், கட்சி தலைமை கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, சிபிஐ விசாரணை, ‘ஜனநாயகன்’ படம் தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கக் கூடாது, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், விஜய்க்கு ஆதரவாக பிறர் பதிவிடும் கருத்துகளை கூட ரீட்வீட் செய்ய வேண்டாம் என சிலருக்கு தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதை நிறுத்துமாறு கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிமுகவில் ஜெயலலிதா தலைமையிலான காலகட்டத்தில் அடிக்கடி ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவித்தவர் நாஞ்சில் சம்பத். புதிய கட்சியில் இணைந்த பிறகு இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது அவருக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவர் இதுகுறித்து புலம்பியதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஏற்கனவே, தவெகவில் இணைந்த பிறகு செங்கோட்டையனுக்கு போதிய மரியாதை வழங்கப்படவில்லை என்ற விமர்சனங்கள் இருந்த நிலையில், தற்போது அதே பட்டியலில் நாஞ்சில் சம்பத்தும் இணைந்துள்ளதாக பேசப்படுகிறது. இதனால், புதிய நிர்வாகிகள் மீது விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகள், தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்சிப் பண்பாடு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Strict restrictions on administrators in Tvk Censorship for administrators Is this the reason for the silence of the new heads


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->