சிறை கைதியும், எஸ்.பியும் சீஃப் கெஸ்ட்.! கொளுத்தி போட்ட பாஜக.!! தடகள சங்கத்தால் வெடித்த சர்ச்சை.!!
SenthilBalaji invented as chief guest for TN athletic club event in karur
அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு தற்போது கைதி எண் 01440 ஒதுக்கப்பட்ட நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தடகள சங்கம் அழைப்பு விடுத்து இருப்பதாக வெளியாகி உள்ள அழைப்பிதழ் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் இரண்டாவது மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டி துவக்க விழா நாளை நடைபெற உள்ள நிலையில் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கரூர் காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவனம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு அழைப்பிதழ் வெளியாகி உள்ளது.

மேலும் அரவக்குறிச்சியில் சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாம சுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்டோ இந்த விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கிருப்பதாகவும் அந்த அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மேற்கோள் காட்டி தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயண திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் "சிறையில் இருக்கிற செந்தில் பாலாஜியை சிறப்பு அழைப்பாளராக அழைத்து இருக்கிறது தமிழ்நாடு தடகள சங்கம்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அழைத்ததே தவறு என்கிற நிலையில், அந்த மாவட்டத்தின் காவல் துறை கண்காணிப்பாளரையே மற்றொரு சிறப்பழைப்பாளராக அழைத்திருப்பது ஆட்சியில் இருப்பவர்களின் அதிகார ஆணவத்தை வெளிப்படுத்துகிறது. இனி சிறையில் இருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளை முக்கிய பிரமுகர்களாக உருவகப்படுத்த இந்த நிகழ்ச்சி தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும்.
தமிழக காவல்துறை தலைவர் அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை இந்த நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது என உத்தரவிட வேண்டும்.

முன்னாள் தமிழக காவல்துறை தலைவர் திரு.வால்டர் தேவாரம் அவர்கள் இந்த தடகள சங்கத்தின் தலைவர். முன்னாள் தமிழக காவல்துறை தலைவர் டி கே ராஜேந்திரன் அவர்கள் இந்த சங்கத்தின் துணை தலைவர்.
சிறையில் இருக்கிற ஒருவர் வர முடியாது என்று தெரிந்தும் அவர் வருவதாக பதிவிட்டிருப்பது குறித்து அவர்களுக்கு தெரியவில்லையென்றால், இந்த தவறை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது தெரிந்தே அனுமதித்துள்ளார்கள் என்றால் தமிழகத்தின் அரசியல் அவலத்தை உணர்த்துவதோடு, அவர்களின் தலைமை பண்பையும் கேள்விக்குறியாக்கும்" என பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
English Summary
SenthilBalaji invented as chief guest for TN athletic club event in karur