மதச்சார்பின்மைக்கு மத்திய அரசால் அச்சுறுத்தல் வரும்போது அதை எதிர்க்காது முதல்வர் விஜய் வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடு; சீமான் ஆவேசம்..! - Seithipunal
Seithipunal


''அரசு நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' கட்டாயமாக்கித் திணிப்பது இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு ஊறுவிளைவிக்கும் கொடுஞ்செயலாகும். ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டிக்காது தவெக அரசு அமைதி காப்பதா?'' என நாதக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது;

''அரசின் நிகழ்ச்சிகளில் 'வந்தே மாதரம்' பாடல் கட்டாயமாகப் பாடப்பட வேண்டுமென ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

இது மதச்சார்பின்மையை அடிநாதமாகக் கொண்டு, பன்மைத்துவத்தை நாட்டின் அடையாளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானதாகும். அதனை வன்மையாக எதிர்க்கிறேன்.

1882-ஆம் ஆண்டு பங்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட 'ஆனந்தமடம்' புதினத்தின் மூலம் புகழ்பெற்ற ‘வந்தே மாதரம்’ பாடல் நாட்டுப்பற்றை வலியுறுத்துவது எனக் கூறப்பட்டாலும், அப்பாடலில் இந்து மதத்தின் கடவுளர்களைப் பற்றிய வரிகள் இருப்பதால், எல்லா சமயத்தவரும் அதனை ஏற்க முடியாது என்பதைக் கருதியே, அப்பாடல் நாட்டுப்பண்ணாக அறிவிக்கப்படாது தவிர்க்கப்பட்டது.

அப்படியிருக்கையில், அதனை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயமாக்கித் திணிப்பது இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு ஊறுவிளைவிக்கும் கொடுஞ்செயலாகும்.

கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய, ‘ஜன கண மன’ எனும் பாடல் நாட்டுப்பண்ணாக இருக்கையில், பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ‘வந்தே மாதரம்’ பாடலை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வலியத் திணித்துப் பாடக் கோருவது தேவையற்ற சிக்கலை உருவாக்குவதாகும்.

ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் இத்தகைய எதேச்சதிகாரப்போக்கு நடவடிக்கைக்கு தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு குறைந்தபட்ச எதிர்ப்பைக்கூட பதிவுசெய்யாது அமைதி காப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

‘மதச்சார்பற்ற சமூக நீதி’ என்பதைக் கொள்கையாக அறிவித்துவிட்டு, மதச்சார்பின்மைக்கு ஒன்றிய அரசால் அச்சுறுத்தல் வரும்போது அதனை எதிர்க்காது முதல்வர் விஜய் வேடிக்கைப் பார்ப்பது வெட்கக்கேடானது.

ஆகவே, ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு, 'வந்தே மாதரம்' எனும் மதச்சார்புக் கொண்டப் பாடலை அரசு நிகழ்வுகளில் கட்டாயமாக்கும் முடிவைப் பின்வாங்க வேண்டுமெனவும், அதனைச் செய்யக்கோரி தவெக அரசு எதிர்ப்புத் தெரிவித்து, அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman says its shameful for Chief Minister Vijay to watch secularism with amusement will not oppose it when the central government threatens it


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->