இதைமட்டும் செய்தால்... எங்கள் வாக்கு பா.ஜ.க.வுக்கு தான்: சீமான் பரபரப்பு பேச்சு.!
Seeman election campaign
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனீ, கம்பம், போடி, திண்டுக்கல், செம்பட்டி, பழனி, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் பிரச்சாரம் நடத்தி வருகிறார்.
அப்போது அவர் பேசியிருப்பதாவது, பணம் இருப்பவர்கள் தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. அரசியல் மக்களுக்காக உழைக்க மட்டும் தான். மக்களை வைத்து பிழைப்பதற்காக இல்லை.
சின்னம் முடக்கப்பட்ட போதும் எண்ணத்தை மாற்ற முடியாது என்ற அடிப்படையில் அவர்கள் கொடுத்த சின்னத்தில் போட்டியிடுகிறோம். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க போன்றவை பெரிய கட்சிகள் என தெரிவிக்கின்றனர்.
ஆனால் தனித்து நிற்க பயப்படுகின்றனர். பத்து ஆண்டுகளாக கோமாவிலிருந்து விட்டு 10 நாட்களில் தேர்தல் வரவுள்ள நிலையில் பா.ஜ.க கச்சத்தீவு குறித்து பேசி வருகிறது.
கச்சத்தீவை பா.ஜ.க தேர்தலுக்குள் மீட்டுக் கொடுத்தால் எங்களது வாக்கு பா.ஜ.கவுக்கு தான். அவர்களால் முடியாது. நான் 13 ஆண்டுகளாக கச்சத்தீவை பற்றி பேசுகிறேன்.
6 மாதங்களுக்கு முன்பு மத்திய மந்திரி அமித் ஷாவிற்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதினேன். பா.ஜ.கவினர் என்னிடம் எவ்வளவு ஆசை வார்த்தைகள் பேசினர்.
அங்கு சேர்ந்திருந்தால் ரூ. 500 கோடியும் 10 சீட்டுகளும் கிடைத்திருக்கும். இலங்கைத் தமிழர்களுக்காக அன்று முதல் இன்று வரை குரல் கொடுப்பவர் நான் மட்டும்தான்.
இலங்கை தமிழர்களை கொன்று குவித்த கட்சிக்கு ஆதரவாக ஆதரவான காங்கிரஸ், தி.மு.க உள்ளது. அவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். பா.ஜ.கவுடன் யார் கூட்டணியில் இருந்தாலும் அது எங்களுக்கு எதிர் கட்சி தான்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னர் போலவும் அவரது அமைச்சர்கள் குறு மன்னர்கள் போலவும் செயல்படுகின்றனர். உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது எல்லாம் செங்கல், புகைப்படம் என காமெடி செய்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.