பள்ளிக்கல்வித்துறை துணையா...? தர்மபுரி பாலியல் தொல்லை விவகாரத்தில் சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு...?
School Education Department complicit Seeman makes sensational allegations Dharmapuri harassment case
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மாவட்டம் குடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் நிகழ்ந்த சம்பவம் குறித்து கடும் அதிர்ச்சியும் ஆழ்ந்த மனவேதனையும் வெளிப்படுத்தியுள்ளார்.அந்த அறிக்கையில், 9-ம் வகுப்பு மாணவிக்கு உடற்கல்வி ஆசிரியர் மணிவண்ணன் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், தமிழக சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளதாக சீமான் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பள்ளி சிறுமிகள் மீதான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மிகுந்த கவலையும் கடும் கண்டனத்துக்கும் உரியதுமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பன்மடங்கு உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், குறிப்பாக பள்ளி வயதிலேயே சிறுமிகள் பாலியல் தாக்குதல்களுக்கு இலக்காகும் செய்திகள் ஒவ்வொரு நாளும் வெளியாகி இதயத்தை சிதறடிக்கின்றன என கூறினார்.
கட்டுக்கடங்காமல் பரவி வரும் போதைப்பொருள் கலாச்சாரம், ஒட்டுமொத்த சமூகத்தையே குற்றச் சமூகமாக மாற்றியதே இத்தகைய கொடூரங்களுக்கு அடிப்படை காரணம் எனவும் குற்றம்சாட்டினார்.இந்த சூழலின் தொடர்ச்சியே தர்மபுரியில் நடந்த இந்த கொடுஞ்செயல் என்றும், அதைவிட மிகப்பெரிய அநீதியாக, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் துணையுடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் பாமர பெற்றோரை ஏமாற்றி கட்டப்பஞ்சாயத்து நடத்தி குற்றத்தை மூடி மறைக்க முயன்றது என சீமான் கடுமையாக குற்றம் சாட்டினார்.
சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, ஊர் பொதுமக்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தியதன் விளைவாக மட்டுமே, குற்றவாளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆனால், குற்றத்தை மறைக்க முயன்றவர்களைத் தப்பிக்க விட்டிருப்பது, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி என அவர் சாடினார்.
இச்சம்பவத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் குற்றத்திற்கு துணைநின்றிருப்பது மன்னிக்க முடியாத கொடுமை எனவும் அவர் தெரிவித்தார்.
எனவே, தர்மபுரி மாவட்டத்தில் நடந்த இந்த பாலியல் தொல்லை சம்பவத்தில், குற்றம் செய்த ஆசிரியர் மட்டுமின்றி, அதை மறைக்க முயன்ற அனைத்து கயவர்களுக்கும், எந்தவித அரசியல் அழுத்தங்களுக்கும் அதிகார தலையீடுகளுக்கும் இடமளிக்காமல், நேர்மையான, விரைவான நீதிமன்ற விசாரணை நடத்தி மிகக் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தமிழ்நாடு அரசை சீமான் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
School Education Department complicit Seeman makes sensational allegations Dharmapuri harassment case