புதிய சிக்கலில் சசிகலா.. இரண்டு வாரத்தில் குற்றப்பத்திரிகை.. வெளியாகப்போகும் தீர்ப்பு.!!
sasikala case for karnataka high court
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைத்தண்டனை நிறைவடைந்ததை அடுத்து சசிகலா, இளவரசி ஆகியோர் கடந்த ஜனவரி மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.
சசிகலா சிறையில் இருந்தபோது அவருக்கு சட்டவிதிகளை மீறி சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டது என சிறைத்துறை டிஜிபியாக இருந்த ரூபா கண்டுபிடித்தார். சொகுசு வசதிகளை பெற சசிகலா 2 கோடி சிறை அதிகாரிக்கு லஞ்சம் வழங்கி இருப்பதாகவும் புகார் தெரிவித்தார். இந்த புகார் மீது ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு சிறைத்துறை டிஜிபியாக இருந்த ரூபா கூறிய புகார்களை உண்மை என கண்டுபிடித்தார்.
இதையடுத்து கர்நாடக ஊழல் தடுப்பு துறையினர் சசிகலா மீது கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். அதில் சசிகலா மீதான இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்படி ஊழல் தடுப்பு காவல் துறைக்கு உத்தரவிடுமாறு தெரிவித்திருந்தார். இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே இந்த மனு கர்நாடக நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை செயலாளர் சார்பில் வழக்கறிஞர் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டு, காவல் துறை அமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார். ஆனால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய 2 வார கால அவகாசம் வழங்குமாறு கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தது. ஒருவேளை இரண்டு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
sasikala case for karnataka high court