பருத்தி, நூல் விலை உயர்வை உடனடியாக மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வந்து குறைத்திட வேண்டும்.. சரத்குமார்.!!
sarathkumar statement on may 19
பருத்தி, நூல் விலை உயர்வை உடனடியாக மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வந்து குறைத்திட வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
ஆடை தயாரிப்பில் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்ற திருப்பூர் பின்னலாடைத் துறை, வரலாறு காணாத நூல், பருத்தி விலையேற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது, தேசத்தின் பொருளாதார நலனையும் பாதிக்கும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
பருத்தி நூல் கிலோ ரூ.200 என்பதிலிருந்து ரூ.480 என 100 சதவீதத்திற்கும் மேலாக கடுமையாக உயர்த்தி விற்கப்படுவது ஏற்புடையதல்ல. இந்த விலையேற்றம் பின்னலாடைத் தொழிலையும், நெசவுத்தொழிலையும், அதனை நம்பி வாழும் திருப்பூர், சேலம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், கோவை, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் நசுக்கும் சூழலுக்கு தள்ளியுள்ளது.
மனிதனின் அத்தியாவசிய, அன்றாட தேவையில் உடை இன்றியமையாதது. அந்த உடை தயாரிப்பில், பருத்தி தவிர்த்து இதர ஜவுளிப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு 5% - லிருந்து 12% - 18% ஆக உயர்த்தியதும் இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணம். மேலும், ஆண்டிற்கு சுமார் 10,000 கோடிக்கும் மேலாக அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் ஜவுளி தொழிலின் முக்கிய மூலப்பொருளான பருத்தி, வர்த்தகர்களால் விலை நிர்ணயம் செய்யப்படுகின்ற காரணத்தினாலும் செயற்கை தட்டுப்பாடு, விலையேற்றம் நியாயமற்ற முறையில் தொடர்ந்து நடந்தேறுகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்ச மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிகோலும் பின்னலாடைத் தொழில் நலிவடையாமல் மீண்டும் முன்னெடுத்துச் செல்வதற்கும், வருவாய் இழப்பு ஏற்படாமல் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும் அரசு உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியம்.
எனவே, செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி பருத்தி, நூல் பதுக்குவோர் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பருத்தி, நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தி குறைத்திட, இறக்குமதி வரியை ரத்து செய்து, ஏற்றுமதிக்கு தடை விதிக்கவும், பருத்தியை அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் எனவம். ஜவளிக் தொழிலின் (மக்கிய மலப்பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரிவிதிப்பில் பழைய நடைமுறையே தொடர வேண்டும் எனவும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக அரசு விலை உயர்வு பிரச்சனையில் தனிகவனம் செலுத்தி, பின்னலாடைத் தொழில் நலிந்து விடாமல் மீட்டெடுப்பது குறித்து வல்லுனர் குழு அமைத்து ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
sarathkumar statement on may 19