கிரீன்வேஸ் சாலையில் குடியிருப்புகள் அகற்றப்படுவதை நிறுத்திடுக.. தமிழக அரசுக்கு சரத்குமார் வலியுறுத்தல்.!!
sarathkumar statemant on may 09
கிரீன்வேஸ் சாலையில் குடியிருப்புகள் அகற்றம் நிறுத்தப்பட வேண்டும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள, கோவிந்தசாமி நகர் இளங்கோ தெரு, கட்டபொம்மன் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 260 குடியிருப்புகள், பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி தொடர்ந்து வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்று வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணையா என்பவர் நேற்று தீக்குளித்து இன்று உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
சுமார் 70 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்குக் குடிநீர், மின்சாரம், கழிவுநீர் கால்வாய் இணைப்பு, குடும்ப அட்டை மற்றும் ஆதார் உள்ளிட்ட அனைத்து அரசு சலுகைகளும், அங்கீகாரமும் அளித்து, வரிவசூலித்து திடீரென இடத்தை விட்டு அகற்ற முயன்றால் அவர்கள் எங்கே செல்ல முடியும். அரசு, நீதிமன்ற உத்தரவிற்கு மதிப்பளித்து நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றாலும், மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்ற தகுந்த மாற்றிடங்களுக்கு ஏற்பாடு செய்யாமல், அதிகாரிகள் குடியிருப்புகளை இடித்து தள்ளுவது நியாயமற்றது.
அப்பகுதி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மாற்று இடத்தில் மக்களின் வாழ்வாதாரத்திற்கான குடியிருப்புகளை உருவாக்கி, அங்கே அவர்களை குடியமர்த்திய பிறகே நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டு, இப்பிரச்சனைக்கு அரசு சுமூகத்தீர்வு காண வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன். மேலும், இனி இதுபோன்ற சம்பவம் தமிழகத்தில் நடைபெறாமல், ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் நடந்து கொள்ள வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்த கண்ணையா அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
English Summary
sarathkumar statemant on may 09