"மூவர்ணக்கொடி என்ற பெயரில் ஏழைகளிடம் ரூ.20 பறிப்பது மிகவும் வெட்கக்கேடானது" - ராகுல் காந்தி
Rahul Gandhi speech about national Flag issue
வரும் ஆகஸ்ட் 15 இல் இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் வரும் காரணத்தால் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றும் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இதன்படி, வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக அஞ்சல் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்கப்படுகிறது. இந்தநிலையில், ஹரியானா மாநிலத்தில் இருக்கும் நியாய விலை கடைகளில் 20 ரூபாய் கொடுத்து தேசியக்கொடி வாங்கினால்தான் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என்ற நிபந்தனை வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து சமூக வலைதளங்களில் பதிவுகளை தொடர்ந்து ரேஷன் கடை ஊழியரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, அந்த ஊழியர் எனக்கு அப்படித்தான் உத்தரவு வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த சம்பவத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
இது குறித்து பாஜக எம்பியான வருண் காந்தி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் தேசியக்கொடி வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. ஏழைகளின் உணவை பறிப்பது வெட்கக்கேடு என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து ரேஷன் கடை ஊழியரின் உரிமம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து இருக்கின்றார். அதில், "தேசிய உணர்வை ஒருபோதும் விற்க முடியாது. ரேஷன் பொருட்கள் கொடுக்கையில், ஏழை, எளிய மக்களிடம் தேசிய கொடிக்காக ரூ.20 வசூலிப்பது மிகவும் வெட்கக்கேடானது. தேசியக் கொடியுடன், மத்திய பாஜக அரசு நமது நாட்டு ஏழைகளின் சுயமரியாதை உணர்வையும் சேர்த்து தாக்குகிறது" என்று தெரிவித்து இருக்கின்றார்.
English Summary
Rahul Gandhi speech about national Flag issue