'திமுக, அதிமுக மற்றும் பாஜக அடிப்படையில் அனைவருமே சாதியவாதிகள்': புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சனம்..!
Puthiya Tamil Nadu Party leader Krishnasamy criticizes DMK and AIADMK as all are basically casteists
சமூக நீதி மற்றும் சுயமரியாதை பற்றி பேசும் அதிமுக, திமுக மற்றும் இந்து ஒற்றுமையை பற்றி பேசும் பாஜக என யாருமே கவின் படுகொலையை கண்டிக்கவில்லை.இதனால் அவர்களை ஒரே தட்டில் வைத்து தான் பார்க்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். ராஜபாளையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும், கூறியதாவது:
சமூக நீதி, சமத்துவம், சுதந்திரம், மதச்சார்பற்ற தன்மை என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. இது இந்திய அரசியல் சாசனத்தின் ஆன்மா. தற்போது அதற்கு நேர் விரோதமான சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது என்று கவலை தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த ஜூலை 27-இல் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஐ.டி ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்டார். தங்களது கொள்கைக்கு எதிராக நடக்கும் இதுபோன்ற படுகொலை சம்பவங்களை தடுத்து நிறுத்த திமுக, அதிமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், இந்து ஒற்றுமை பேசும் பாஜக அதற்கு எதிராக உள்ள சாதி வேறுபாடுகளை களைய முன்வர வில்லை என்றும், சமூக நீதி, சுயமரியாதை பேசும் திமுக, அதிமுக, இந்து ஒற்றுமை பேசும் பாஜக என எவருமே கவின் படுகொலையை கண்டிக்கவில்லை என்றும், அடிப்படையில் அனைவருமே சாதியவாதிகளாகவே உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
மேலும், திமுக பல தவறுகளை செய்து வருகிறதாகவும், 525 வாக்குறுதிகளில் முக்கிய அம்சங்களை கூட நிறைவேற்ற வில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். 2009-இல் பட்டியல் பிரிவை பிரித்து அருந்ததியர்களுக்கு 03 சதவீதம் திமுக அரசு உள் ஒதுக்கீடு வழங்கியது . கடந்த திமுக ஆட்சியில் அரசு துறை பணிகளை ஒன்றிய வாரியாக பிரித்து அனைத்து பணிகளையும் முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியர் சமூகத்திற்கு ஒதுக்கி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், கவின் படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஒன்றியங்கள் தோறும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், முதலாவதாக திருச்சியில் ஆகஸ்ட் 17-இல் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், தூய்மை பணியாளர்கள் 10 ஆண்டுகள் பணி செய்தால் பணி நிரந்தரம் என்ற வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்றும், பேரிடர் காலங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை ஏமாற்ற கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து விட்டு, 'உங்களுடன் ஸ்டாலின் என்பது ஏமாற்று வேலை'. திமுக அரசுக்கு இறுதி தீர்ப்பு வழங்கும் நேரம் வந்து விட்டது என்றும் கூறியுள்ளார். அத்துடன், ராஜபாளையம் நகராட்சியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்றும், வத்திராயிருப்பில் உள்ள தாலுகா தலைமை மருத்துவமனையை சீரமைக்கக்கோரி செப்டம்பரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ராஜபாளையம் எம்.எல்.ஏ அரிசி ஆலையில் இருந்து மட்டுமே தான் நெல் அரவை செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்துவதால் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
English Summary
Puthiya Tamil Nadu Party leader Krishnasamy criticizes DMK and AIADMK as all are basically casteists