அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ள புரட்சி பாரதம் கட்சி; தேர்தல் அறிவிக்கப்படும் போது அடுத்த கூட்டணி குறித்து நிலைபாடு எடுக்கப்படும்; ஜெகன்மூர்த்தி பேட்டி..!
Puratchi Bharatham Party has withdrawn from the AIADMK alliance
அதிமுக கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம் கட்சி விலகியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார். 2026-2027 ஆம் ஆண்டிற்கான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி சென்னை தியாகராய நகரில் வெளியிட்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது கூறியதாவது;
திமுக அரசு ஆதிதிராவிடர் மக்களுக்கு துரோகம் செய்ததால்தான் ஆட்சியை இழந்தது என்றும், ஆதிதிராவிடர் துறைக்கு ஒதுக்கும் நிதியை வேறு துறை திட்டங்களுக்கு செலவழித்ததாகவும், இது ஆதிதிராவிடர் மக்களுக்கு திமுக செய்த துரோகம் என்று குமார் சுமத்தி பேசியுள்ளார்.
அத்துடன், கடந்த அரசை போல இல்லாமல் தமிழக வெற்றிக் கழக அரசு, ஆதிதிராவிடர் நலத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக அந்த துறைக்கே செலவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இதுவரை முதலமைச்சர் விஜயை சந்திக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனவும், புரட்சி பாரதம் சார்பில் தயாரிக்கப்பட்ட நிழல் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சரை சந்தித்து வழங்க முயற்சி எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசு நிகழ்ச்சியில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதுதான் சரியானது என்று சுட்டிக்காட்டியதோடு, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விழாவில் மூன்றாவதாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும், தமிழக அரசு இந்த விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆள்வதால், தமிழக காங்கிரஸ் பிரதிநிதிகள் கர்நாடக காங்கிரஸ் அரசுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் வழங்கவில்லை என்றால் தமிழக அரசில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அமைச்சர்கள் இரண்டு பேரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ஜெகன் மூர்த்தி குறிப்பிட்டுள்ளார்..
தொடர்ந்து அவர் கூறுகையில், அதிமுக உடனான கூட்டணி தேர்தலுடன் முடிந்துவிட்டதாகவும், நாங்கள் தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என தெரிவித்துள்ளார். வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு அதற்கு இன்னும் காலம் உள்ளது. தேர்தல் அறிவிக்கப்படும் போது கூட்டணி குறித்து நிலைபாடு எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Puratchi Bharatham Party has withdrawn from the AIADMK alliance