மக்கள் பணம்… ஆனால் கேள்வி கேட்க முடியாதா? - PM CARES விவகாரத்தில் சர்ச்சை வெடிப்பு...!
Public money but cant questions asked Controversy erupts over PM CARES fund
பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரண நிதி (PM CARES), பிரதமரின் தேசிய நிவாரண நிதி (PMNRF), தேசிய பாதுகாப்பு நிதி (NDF) ஆகிய மூன்று முக்கிய நிதிகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்ப முடியாது என்று பிரதமர் அலுவலகம் (PMO) மக்களவைச் செயலகத்திற்கு அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.இந்த நிதிகள் அரசு நிதிகள் அல்ல, மக்களின் தன்னார்வ நன்கொடைகளால் உருவாக்கப்பட்டவை.

மேலும், இவை இந்திய அரசின் தொகுப்பு நிதியிலிருந்து (Consolidated Fund of India) ஒதுக்கப்படுவதில்லை என்பதால், நேரடியாக அரசின் கட்டுப்பாட்டில் வராது என பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
இதற்காக இரண்டு முக்கிய விதிகளையும் PMO மேற்கோள் காட்டியுள்ளது.
விதி 41(2)(viii) – நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகள் அரசின் நேரடி பொறுப்புக்குட்பட்ட விஷயங்களைச் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
விதி 41(2)(xvii) – அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத அமைப்புகள் அல்லது நபர்களின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப இயலாது.
மேலும், இந்த மூன்று நிதிகளும் “பொது தொண்டு அறக்கட்டளை” (Public Charitable Trust) என்ற சட்ட அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவை அரசின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டில் வருவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முடிவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்களின் நன்கொடைகளால் உருவான ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க கூடாதென தடை விதிப்பது ஜனநாயகத்தின் ஆவியை காயப்படுத்துகிறது” என குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுநலன் சார்ந்த கேள்விகளை கூட கேட்க முடியாத நிலை ஏன்? அரசு ஏன் பொறுப்புக்கூறலிலிருந்து தப்பிக்க முயல்கிறது? இந்த நிதிகளில் என்ன மறைக்கப்படுகிறது? நாடாளுமன்றம் அரசியலமைப்பின்படி செயல்படுமா அல்லது ஒரே அலுவலகத்தின் உத்தரவுப்படி இயங்குமா?” என்ற பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
“இது வெளிப்படைத்தன்மை அல்ல… இது அதிகார மையப்படுத்தல். இது ஜனநாயகக் கட்டமைப்பின் மீது நடத்தப்படும் அமைதியான தாக்குதல்” என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.இதன் மூலம், PM CARES உள்ளிட்ட நிதிகள் குறித்து அரசியல் அரங்கில் புதிய விவாதப் புயல் எழுந்துள்ளது.
English Summary
Public money but cant questions asked Controversy erupts over PM CARES fund