பொருளாதார நெருக்கடி: மத்திய அரசின் நிர்வாகத் திறமையின்மை தான் காரணம்... டாக்டர் இராமதாஸ் கண்டனம்! - Seithipunal
Seithipunal


பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தலைவர் மருத்துவர் ச.இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "இந்திய நாடு இன்று ஒரு மிகப்பெரிய பொருளாதாரப் பேரிடரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் அண்மைக்கால அறிவிப்புகள் மிகத்தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளன. 

மக்களை தங்கம் வாங்காதீர்கள், சமையல் எண்ணெயைக் குறைவாகப் பயன்படுத்துங்கள், பெட்ரோல் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள் எனப் பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோள், தேசத்தின் பொருளாதார அடித்தளம் எந்த அளவுக்குத் தள்ளாடிக்கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. கடந்த பத்து ஆண்டுகளாகப் "பொருளாதார வளர்ச்சியில் இந்தியா" எனப் பிரச்சாரம் செய்த நடுவண் அரசு, இன்று ஒட்டுமொத்த தோல்வியையும் சாமானிய மக்கள் தலையில் சுமத்தப் பார்ப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை சர்வதேச சந்தையைக் காரணம் காட்டி கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த நடுவண் அரசு, தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே, மே 15 அன்று பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ₹3 வரை அதிரடியாக உயர்த்தியுள்ளது. உலக அரசியல் சூழலைக் காரணம் காட்டி, மக்களைச் சிக்கனமாக இருக்கச் சொல்லி பிரதமர் கோரிக்கை வைப்பது அடுத்து வரப்போகும் கடுமையான விலை உயர்வுக்கு மக்களைத் தயார்படுத்தும் ஏமாற்று வேலையாகும். இதனாலேயே மோடியை எதிர்க்கட்சிகள் சாடும் நிலைக்கு நடுவண் அரசு ஆளாகியுள்ளது.

ஆட்சிக்கு வரும்போது "ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை ஒரு ரூபாயாக்குவோம்" என்று  அறிவிப்புகளை வெளியிட்டார்கள், இன்று ரூபாயின் மதிப்பை 96 ரூபாய்க்கு அருகில் வீழ்ச்சியடையச் செய்து வேடிக்கை பார்க்கிறார்கள். இந்த மதிப்பு வீழ்ச்சியால், நாம் இறக்குமதி செய்யும் ஒவ்வொரு பொருளுக்கும் கூடுதல் சுமையைச் சுமக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அந்நிய மூலதனம் வெளியேறியிருப்பது, உலக நாடுகளுக்கு இந்தியப் பொருளாதாரத்தின் மீது இருந்த நம்பிக்கை சிதைந்துவிட்டதையே உணர்த்துகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறும்போது அமைதியாக இருந்த அரசு, இப்போது நடுத்தர வர்க்கத்தின் அடிப்படைத் தேவைகளைக் குறைத்துக் கொள்ளச் சொல்வது எவ்வகையில் நியாயம்? நடுவண் அரசின் தவறான வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கைகளே இந்த அவல நிலைக்கு முதன்மைக் காரணம். 

ஈரான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை இந்திய ரூபாயிலேயே வழங்கத் தயாராக இருந்தபோதும், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து அந்த வாய்ப்புகளை நாம் இழந்தோம். இதனால் இன்று டாலர் தட்டுப்பாடு ஏற்பட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்காமல், "மேக் இன் இந்தியா" என வெறும் விளம்பரங்களோடு நின்றதன் விளைவை இன்று ஒட்டுமொத்த நாடும் அனுபவிக்கிறது. நமது நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளையும், உழவர் பெருங்குடி மக்களையும் ஊக்குவிக்காமல் இறக்குமதியை மட்டுமே நம்பியிருப்பது, நம் நாட்டை அண்டை நாடான இலங்கையைப் போன்ற ஒரு பொருளாதாரச் சிக்கலில் தள்ளிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தகவல் தொழில்நுட்பத் துறையிலும் (IT) உலகளாவிய மாற்றங்களுக்குத் தயாராகாமல், வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் நம் நாட்டு இளைஞர்களை இந்த அரசு நிறுத்தியுள்ளது. ஒருபுறம் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகைகளையும், ஊக்கத்தொகைகளையும் வாரி வழங்கும் நடுவண் அரசு, மறுபுறம் சாதாரண சாமானிய மக்களைத் தங்கம் வாங்குவதைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுப்பது வேடிக்கையாக உள்ளது. தங்கம் என்பது இந்தியக் குடும்பங்களின், குறிப்பாக ஏழைப் பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார அரண் என்பதை இந்த அரசு உணரத் தவறிவிட்டது.

எனவே, நடுவண் அரசு இனியும் உண்மைகளை மறைக்காமல், நாட்டின் தற்போதைய ஒட்டுமொத்த பொருளாதார நிலை குறித்து உடனடியாக  ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை வழங்குவதை உடனடியாக நிறுத்திவிட்டு, ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் கைகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்க நேரடித் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pmk ramadoss condemn to pm modi central govt


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->