இபிஎஸ் அணியை ஓரம் கட்டும் பாஜக! ஓபிஎஸ் அணி எம்பிக்கு முக்கியத்துவம்!
OPS supporter elected as Central Standing Committee member
மத்திய நிலைக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்!
தமிழகத்தில் காலியாக இருந்த 6 ராஜ்யசபா எம்.பி பதவிகளில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் தருமர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக கழக செயலாளராக இருந்தவர் ஆர்.தர்மர். இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர். அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் இரு அணிகளாக பிரிந்து நின்ற போது ஓபிஎஸ் பக்கம் தர்மர் நின்றார். முன்னதாக முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட இரண்டு முறை சீட் கேட்டார். ஆனால் கட்சி தலைமை கொடுக்கவில்லை.
இவருடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான சி.வி.சண்முகம் ஈபிஎஸ் அணியின் ஆதரவாளராக இருந்து வருகிறார். இபிஎஸ் தலைமையிலான அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராகவும் சிவி சண்முகம் இருந்து வந்துள்ளார்.
கடந்த வாரம் மத்திய தொழில்துறையின் நாடாளுமன்ற நிலை குழு தலைவராக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா நியமிக்கப்பட்டார். அதேபோன்று மத்திய அரசின் கிராமப்புற வளர்ச்சி துறையின் நிலை குழு தலைவராக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நியமனம் செய்யப்பட்டார்.
தற்பொழுது அதிமுக எம்.பி தர்மருக்கு ஜவுளி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாஜகவை பொறுத்தவரை அதிமுகவில் ஓபிஎஸ் அணிக்கு தான் எப்பொழுதுமே தனது ஆதரவை அளித்து வருகிறது. ஓபிஎஸ் அதிமுகவில் தர்மயுத்தம் நடத்திய போதும் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இபிஎஸ் உடன் கைகோர்த்தார்.
ஏற்கனவே அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது. தற்பொழுது அதிமுகவின் ஓபிஎஸ் அணியை சேர்ந்த தர்மருக்கு நிலை குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது பாஜகவின் ஒரு தலைப்பட்ச நிலையை வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைவது சந்தேகம் தான் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
English Summary
OPS supporter elected as Central Standing Committee member