பல மாவட்டங்களில் பரிதவிக்கும் மக்கள்.. முதல்வருக்கு முக்கிய கோரிக்கை வைத்த ஓபிஎஸ்.!!
ops statement on june 23
விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட பல மாவட்டங்களில் அரசின் மளிகைப் பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் பரிதவிப்பதாக தகவல்கள் வருகின்றன. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனிக்கவனம் செலுத்தி அனைவருக்கும் மளிகைத் தொகுப்புடன் கூடிய நிவாரணத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் ஒ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இபோது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, கொரோனா கொடுந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவித்த அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, முதல் தவணை ஏற்கெனவே அளிக்கப்பட்டள்ள நிலையில், இரண்டாவது தவணையும், அதனுடன் 14 பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பும் தற்போது வழங்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், பல மாவட்டங்களில் நிவாரண நிதி மட்டுமே கொடுக்கப்படுவதாகவும், மளிகைத் தொகுப்பு கொடுக்கப்படுவதில்லை என்றும் செய்திகள் வருகின்றன. சில இடங்களில், மளிகைத் தொகுப்பில் குறைவான பொருட்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மளிகை தொகுப்பு பைகள் நியாய விலைக் கடைகளுக்கு செல்வதில்லை என்று கூறப்படுகிறது. சில நியாய விலைக் கடைகளில் மக்கள் கூட்டத்தை தவிர்ப்பதற்காக நாள் மற்றும் நேரம் குறித்து டோக்கன்கள் வழங்கப்பட்டாலும், உரிய நேரத்தில் மளிகைப் பொருட்கள் வராததால் மளிகைத் தொகுப்புடன் கூடிய நிவாரணத் தொகையை வழங்க முடியாமல் நியாய விலைக் கடை ஊழியர்கள் தவிக்கின்றனர். சில நியாய விலைக் கடைகளில், டோக்கன்களை வாங்கிக் கொண்டு சிலருக்கு நிவரணத் தொகை மட்டும் வழங்கப்படுகிறது. இதனால் இவர்களுக்கு மளிகைத் தொகுப்பு என்பது கேள்விக்குறியாகிறது. அதேசமயத்தில், சிலருக்கு மளிகைத் தொகுப்புடன் கூடிய நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் மளிகைத் தொகுப்பு பெறாத குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று அங்குள்ள ஊழியர்களிடம் கேட்கும்போது, சில சமயங்களில் வாக்குவாதம் ஏற்படுவதாகவும் தெரிய வருகிறது. மொத்தத்தில், பல இடங்களில், குறிப்பாக, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் அரசின் மளிகை பொருட்களை வாங்க முடியாமால் மக்கள் பரிதவிப்பதாக தகவல்கள் வருகின்றன. நிவாரணத் தொகை வழங்கும்போது, கூடவே மளிகைத் தொகுப்பும் வழங்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, அனைவருக்கும் மளிகைத் தொகுப்புடன் கூடிய நிவாரணத் தொகை கிடைக்கவும், ஏற்கெனவே நிவாரணத் தொகை மட்டும் பெற்றுக் கொண்டவர்களுக்கு மளிகைத் தொகுப்பு வழங்குவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.