பி.கே. மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவினை அரசு விழாவாக நடத்தவேண்டும்.. தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ் கோரிக்கை.!! - Seithipunal
Seithipunal


தேசியத் தலைவர் திரு. பி.கே. மூக்கையா தேவர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை அரசு விழாவாக நடத்தவும், அவர் பிறந்த ஊரில் உள்ள பள்ளிக்கு அவரது பெயரை சூட்டவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தி.மு.க. அரசை வலியுறுத்தி உள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள்" என சொல்லில் மட்டுமின்றி செயலிலும் செய்து காட்டிய பெருமைக்குரிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் வாரிசும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கு நடத்தப்பட்ட முதல் பொதுத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியிலிருந்தும், 1957, 1962, 1967, 1971 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் உசிலம்பட்டி தொகுதியிலிருந்தும் தொடர்ச்சியாக ஆறு முறை அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட மக்கள் - பணியாற்றியவரும், தற்காலிக பேரவைத் தலைவராக பணியாற்றிய அனுபவம் பெற்றவரும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புற பணியாற்றியவருமான மறைந்த தியாகி திரு. பி.கே. மூக்கையா தேவர் அவர்களின் நூற்றாண்டு துவக்க விழா . 04-04-2022 அன்று துவங்க இருக்கிறது.

திரு. மூக்கையாத் தேவர் அவர்கள் மாணவப் பருவத்திலிருந்தே பொதுக் காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டு, நீதிக்கும், நேர்மைக்கும், நியாயத்திற்கும் போராடியவர். ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கள்ளர் இனத்தைச் சார்ந்தவர்கள் குற்றப் பிரிவினராக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அதனை ஒழித்து, அந்த இனத்தினுடைய பாரம்பரிய பெருமைகளை வெளிக் கொணர்ந்து, அவர்களின் உயர்வுக்கு வழி வகுத்தப் பெருமை திரு. மூக்கையா தேவர் அவர்களுக்கு உண்டு. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களைப் போலவே, ஒரே சமயத்தில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர் திரு. மூக்கையா தேவர் அவர்கள்.

அகில இந்திய அளவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலும், தமிழ்நாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தலைமையிலுமான அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, தேசியத்தையும், தெய்வீகத்தையும் உயர்த்திப் பிடித்த திரு. மூக்கையா தேவர் அவர்கள், 1963 ஆம் ஆண்டு அந்தக் கட்சியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து 1971 ஆம் ஆண்டு அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவராக உயர்ந்து, தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர். கச்சத்தீவு இலங்கை நாட்டிற்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டபோது, அதனை எதிர்த்து வலுவான வாதங்களை மக்களவையில் முன்வைத்தவர் திரு. மூக்கையா தேவர் அவர்கள். கச்சத்தீவு குறித்து அவர் ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

கல்விப் பணியில் இவர் ஆற்றிய பங்கு போற்றத்தக்கது. சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து, உசிலம்பட்டி, நீலித்தினல்லூர், கமுதி ஆகிய இடங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் இவர் நிறுவிய கல்லூரிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி, தங்கும் வசதி, உணவு ஆகியவை வழங்கப்பட்டன. தன்னுடைய அரசியல் ஆசான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு . மதுரை, கோரிப்பாளையம், வைகைக் கரையில் பிரம்மாண்டமான சிலையை நிறுவிய பெருமை திரு. மூக்கையா தேவருக்கு உண்டு.

இப்படி பல பெருமைகளுக்குரியவரும், பிற்படுத்தப்பட்ட மக்களை தூக்கிவிட பாடுபட்டவரும், உறங்காப் புலி என பெருமையோடு அழைக்கப்பட்டவரும், வீரம் மிகுந்த மண்ணின் மைந்தருமான மறைந்த தியாகி திரு. பி.கே. மூக்கையா தேவர் அவர்களின் நூற்றாண்டு துவக்க விழா 04-04-2022 அன்று ஆரம்பிக்க இருப்பதால், அதனை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென்பதும், அவர் பிறந்த ஊரான பாப்பாபட்டியில் உள்ள அரசு கள்ளர் பள்ளிக்கு பி.கே. மூக்கையா தேவர் பெயரை சூட்ட வேண்டுமென்பதும் தென் தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாக உள்ளது. இது தொடர்பாக, அப்பகுதி மக்களும், தியாகி பி.கே. மூக்கையா தேவர் நற்பணி மன்றத்தின் சார்பாகவும் என்னிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறைந்த காலமே வாழ்ந்தாலும் நிறைந்த சாதனைகளைப் படைத்த திரு. மூக்கையா தேவர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை அரசு விழாவாக கொண்டாடுவதும், அவர் பிறந்த ஊரில் உள்ள பள்ளிக்கு அவரது பெயரை சூட்டுவதும் நாம் அவருக்கு செய்யும் மரியாதையாகும்.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, தென் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து, தியாகி திரு. பி.கே. மூக்கையா தேவர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை அரசு விழாவாக கொண்டாடவும், அவர் பிறந்த ஊரான பாப்பாப்பட்டியில் உள்ள பள்ளிக்கு அவரது பெயரை சூட்டவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops statement for pk mookiah thever


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->