நீட் விவகாரம் : திமுகவினர் கூறுவது வடிகட்டின பொய்.. கொந்தளிப்பில் ஓபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


நீட் தேர்விற்கு மூலக் காரணமாக தி.மு.க. இருந்ததை மூடி மறைக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்மீது வீண் பழி சுமத்தும் தி.மு.க.விற்கு கண்டனம் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு குறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், என் மீதும் குற்றம்சாட்டி மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை விட்டிருப்பதைப் பார்த்தால் "எவ்வளவு பெரிய பொய்யானாலும் திரும்பத்திரும்ப சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத் தொடங்கி விடுவார்கள்" என்ற கோயபெல்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் பேசுகிறாரோ என்ற எண்ணம் தான் மக்கள் மத்தியில் தோன்றுகிறது. தி.மு.க.வின் இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டிய கடமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு.

இந்திய மருத்துவக் குழுவால் வெளியிடப்பட்ட 21-12-2010 நாளைய அறிவிக்கை எண். MCI-31(1)/2010-Med/49068, 27-12-2010 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின் முதல் பத்தியிலேயே இளநிலை மருத்துவப் படிப்பிற்க்கான ஒழுங்கு நெறிமுறைகள் மத்திய அரசின் ஒப்புதலோடு இந்திய மருத்துவக் கழகம் வகுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, இந்திய மருத்துவக் குழுவால் வெளியிடப்பட்ட 21-12-2010 நாளைய அறிவிக்கை எண் MCi-18(1)/2010Med/49070, 27-12-2010 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையின் முதல் பத்தியிலேயே முதுநிலை மருத்துவப் படிப்பிற்க்கான ஒழுங்கு நெறிமுறைகள் மத்திய அரசின் ஒப்புதலோடு இந்திய மருத்துவக் கழகம் வகுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2010 ஆம் ஆண்டு தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசின் ஒப்புதலோடு வெளியிடப்பட்ட அறிக்கைகளில்தான் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility-cumEntrance Test) என்பது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. அப்பொழுது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் அமைச்சராக இருந்தவர் தி.மு.க.வைச் சேர்ந்த திரு. எஸ். காந்திசெல்வன் அவர்கள்.

தி.மு.க. ஆட்சியில் இருந்தவரை நீட் தமிழ்நாட்டில் இல்லை என்று கூறியிருக்கிறார் மாண்புமிகு அமைச்சர் திரு. துரைமுருகன் அவர்கள். 2010 ஆம் ஆண்டு டிசம்பரில் நீட்டுக்கு கையெழுத்து போட்ட தி.மு.க., 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில், ஐந்தே மாதத்தில் ஆட்சியையே இழந்துவிட்டது. பிறகு எப்படி தி.மு.க.வின் ஆட்சிக் காலத்தில் நீட் வரும். எனவே, திரு. மு. கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது நீட் தடுத்து நிறுத்தப்பட்டது என்ற திரு. துரைமுருகன் அவர்களின் வாதமே வடிகட்டின பொய் என்பதை இந்தத் தருணத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஒருவேளை, 2011 சட்டமன்றத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று தெரிந்துகொண்டுதான் வேண்டுமென்றே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இதுபோன்ற ஏழை, எளிய மக்கள் விரோத நுழைவுத் தேர்வுக்கு தி.மு.க. ஆதரவு அளித்ததோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.

இதனைத் தொடர்ந்து, இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் - படிப்புகளுக்கு நீட் தேர்வின் மூலம்தான் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று இந்திய மருத்துவக் கழகம் தனது 26-04-2012 நாளிட்டக் கடித எண். MCI-154{3)/2012-Estt. 103270 to 103410 மூலம் அனைத்து மாநில சுகாதாரச் செயலாளர்களுக்கும் தெரிவித்தது. இந்த சமயத்தில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் இல்லை . அதே சமயத்தில் மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்துக் கொண்டிருந்தது. மத்திய அரசின் இந்தச் செயலை எதிர்த்து அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் குரல் கொடுத்தார்கள். வேறு சில மாநிலங்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து, மத்திய அரசு நீட் தேர்வை தள்ளி வைத்தது. ஆனால், அடுத்த ஆண்டிற்கான தேர்வினை 05-05-2013 அன்று அப்போதைய மத்திய அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட , 115 மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசால் பிறப்பிக்கப்பட்ட, தி.மு.க.-வைச் சார்ந்த அப்போதைய மத்திய இணை அமைச்சர் திரு. எஸ்.காந்தி செல்வன் அவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட நீட் தேர்விற்கு வழிவகுக்கும் MCI-31(1)/2010-Med/49068 மற்றும் MCI-18{1)/2010-Med/49070 இரண்டு அறிவிக்கைகளை ரத்து செய்து 18-07-2013 அன்று தீர்ப்பளித்தது. நீட் தேர்வு குறித்த 2010 ஆம் ஆண்டு அறிக்கைகளில் தான் தி.மு.க.விற்கு பங்கு இருக்கிறதே தவிர, அதனை ரத்து செய்து 2013 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தி.மு.க.வின் பங்கு இல்லை என்பதுதான் யதார்த்தம்.

உண்மை நிலை இவ்வாறிருக்க, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கு தி.மு.க. ஆதரவளித்த காலகட்டத்தில்தான் தி.மு.க. ஆட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் நீட் தேர்வுக்கு தடை வாங்கியது என்றும், அந்த வழக்குதான் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றதாகவும் திரு. துரைமுருகன் அவர்கள் கூறுகிறார். இதில் கற்பனை வளம் இருக்கிறதே தவிர உண்மை இருப்பதாகத் தெரியவில்லை . ஏனென்றால், 2011-12 ஆம் கல்வி ஆண்டின்போது தி.மு.க. ஆட்சியிலேயே இல்லை. 2013 ஆம் ஆண்டைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்பது 115 தனியார் கல்லூரிகளால் தாக்கல் * செய்யப்பட்ட மனுவின் மீதானது. திரு. துரைமுருகன் கூற்று சரி என்று வைத்துக் கொண்டாலும், தி.மு.க.-வே சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டு, என்னுடைய நினைவிற்கு எட்டிய வரையில், 2010 ஆம் ஆண்டு நீட் தேர்விற்கு ஆதரவு தெரிவித்த தி.மு.க... தமிழ்நாட்டில் ஆட்சி பறிபோன பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பின், 2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20-ஆம் நாள் நீட் குறித்த கருத்தைத் தெரிவித்தது. அப்போதைய தி.மு.க. தலைவர் வெளியிட்ட அறிக்கையில், "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு என்றும், மருத்துவப் படிப்பிற்கு மத்திய அரசு நீட் தேர்வு நடத்தப்படுவதாக தகவல்கள் வருகின்றன என்றும், இதனை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென்றும்" கூறப்பட்டு இருக்கிறது. மத்திய அரசில் இருந்து கொண்டு தகவல் வருவதாக அறிக்கை வெளியிடுவதிலிருந்தே தி.மு.க. எந்த அளவிற்கு 'நீட் தேர்வு ரத்து' என்ற பிரச்சனையில் அக்கறையில்லாமல் இருந்து இருக்கிறது என்பது தெளிவாகிறது. அதாவது, 2010 ஆம் ஆண்டு நீட் தேர்விற்கு ஆதரவாக கையெழுத்திட்டுவிட்டு, 2012 ஆம் ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று முரசொலியில் எழுதுகிறார். என்ன அக்கறை! என்ன உறுதிப்பாடு! இதிலிருந்து 'பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்' என்ற அடிப்படையில் தி.மு.க. செயல்பட்டு இருப்பது தெளிவாகிறது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில், உளப்பூர்வமாக, மனசாட்சியுடன் ஏழை, எளிய கிராம மாணவ மாணவியருக்காக, அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்காக நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டுமென்று பாடுபட்டது. நாங்கள் மத்திய அரசில் அங்கம் வகிக்காத நிலையிலும், ஏழை, எளிய மாணவர்களுக்கு மாநில அரசால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கில், அரசுப் , பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை வழங்கினோம். இதன் காரணமாக, ஆண்டிற்கு கிட்டத்தட்ட 400 ஏழை, எளிய மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். தி.மு.க. செய்த தவறினால் ஏற்பட்ட காயத்திற்கு ஓரளவு மருந்து கொடுத்து குணப்படுத்திய - அரசு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீட் தேர்வு ரத்து என்பதற்கு தொடர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் குரல் கொடுக்கும், கொடுத்துக் கொண்டேயிருக்கும்.

மத்திய அரசுக்கு கைகட்டி நின்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி நடத்தியதாக திரு. துரைமுருகன் அவர்கள் கூறி இருக்கிறார். யாருக்கும் கைகட்டி நிற்க வேண்டிய அவசியம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இல்லை. அதே சமயத்தில் தமிழ்நாட்டின் நலனுக்காக, தமிழக மக்களின் நலனுக்காக மத்திய அரசிடம் ஒத்துழைப்பு கொடுக்கத் தயங்கமாட்டோம். 'காரியம் பெரிதா, வீரியம் பெரிதா' என்று கேட்டால் எங்களைப் பொறுத்தவரை காரியம்தான் பெரிது. அதனால்தான் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என பல நல்ல திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்தன என்பதை திரு. துரைமுருகன் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர்கள் கொத்து கொத்தாக கொலை செய்யப்பட்டபோது, தி.மு.க. என்ன செய்து கொண்டிருந்தது? அதற்குக் பெயர் என்ன? என்பதை திரு. துரைமுருகன் அவர்களின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.
செய்த தவற்றை ஒத்துக்கொண்டு அதற்கு பரிகாரம் செய்ய நடவடிக்கை எடுக்காமல், நல்லத் திட்டங்களை தமிழ்நாட்டிற்கு அளித்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை குறை சொல்வது என்பது கடும் கண்டனத்திற்குரியது. 'கருமமே கண்ணாயினார்' என்பதன் அடிப்படையில், நீட் தேர்வை ரத்து செய்ய முனைப்புடன் நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops statement for dmk duraimurugan


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->