ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 02-ஆம் பிடித்து அசத்திய கோவை மாற்றுத் திறனாளி இளைஞர்..!
Differently abled youth from Coimbatore achieves remarkable feat by securing All India Rank 2 in the IAS exam
கோவை உக்கடம் அல் அமீன் காலனியை சேர்ந்தவர் 25 வயதான அப்துல்லா அப்ரித். இவர் குறைப் பிரசவமாக ஆறு மாதத்தில் பிறந்ததால் உடல் உறுப்புகள் போதிய வளர்ச்சி இல்லை. இதனால், யாருடைய துணையும் இன்றி சிறிது தூரம் கூட நடக்க முடியாமல் தவித்து வந்தவர்.
இந்நிலையில், பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து, அவரின் அயராத பெரும் முயற்சியால் யுபிஎஸ்சி தேர்வில் ஒரே முயற்சியில் தேர்ச்சிபெற்று அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 942-வது இடத்தையும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் இந்திய அளவில் 02-ஆம் இடத்தையும் பிடித்து ஐஏஎஸ் கனவை நனவாக்கியுள்ளதோடு அவரது பெற்றோருக்கு பெருமை தேடி தந்துள்ளார். இவர் தமிழ் கல்வி வழியில் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்றுள்ளமை குறித்து அப்துல்லா அப்ரித் கூறியுள்ளதாவது;
''எனது தந்தை அப்துல் அஜீம், தாய் சர்மிளா, தங்கை, நண்பர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், உறவினர்கள் என பலரின் உதவியோடு சாதித்துள்ளேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தன்னால், தனியாக இயங்க முடியாது என்றும், தனக்கு கண் பார்வை குறைபாடும் இருப்பதால் அவரது தந்தை தான் பள்ளி, கல்லூரிகளில் புத்தகங்களை படித்து காண்பித்து கல்வி கற்றுத்தந்தார் என்றும், அவர் ஒரு நகைப்பட்டறையில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சிவில் சர்வீஸ் தேர்வை கண்டு யாரும் பயப்பட தேவையில்லை என்றும், இந்திய அளவில் உச்சபட்ச தேர்வு இது என்றாலும், முயற்சித்தால் யாரும் வெற்றி பெறலாம் என்று நம்பிக்கை கொடுத்துள்ளார். அதேப்போன்று தான் சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வில் வெற்றிபெற்றேன். தேர்வு எழுதுவதற்கு கடும் பயிற்சிகளை எடுத்ததாக கூறியுள்ளார்.

இதற்காக காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை பயிற்சிகள் மேற்கொண்டதாகவும், செவி வழியாக கேட்டுத்தான் படிக்க முடிந்தது என்று தெரிவித்துள்ளார். அத்துடன், டெல்லியில் நடந்த நேர்முகத்தேர்வில் நேர்காணல் நடத்திய அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு என் மனதில் தோன்றிய பதில்களை கூறியதாகவும், தமிழில் தான் தேர்வை சந்தித்து தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுபவர்களில் முதலில் தங்களை மாணவர்கள் என்று நினைக்காமல், ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று நினைத்து படிக்கத் தொடங்குங்கள் என்றும், நிச்சயம் வெற்றியைத் தரும் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வரும் ஆகஸ்ட் மாதம் தங்கள் பேட்சில் வெற்றிபெற்றவர்களுக்கான பணி ஆணையை மத்திய அரசு வழங்க உள்ளதாக அப்துல்லா அப்ரித் அவரது பெரும் முயற்சியின் மூலம் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிப்பெறுள்ளமை குறித்து தெரிவித்துள்ளார்.
English Summary
Differently abled youth from Coimbatore achieves remarkable feat by securing All India Rank 2 in the IAS exam