''தவெக அமைச்சர்கள் சிலர் டெண்டர்களில் ஊழல் செய்யத் தொடங்கியுள்ள்ளார்கள்; ஆடியோ ஆதாரங்கள் உள்ளன''; அண்ணாமலை தகவல்..! - Seithipunal
Seithipunal


சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ‘வி த லீடர்ஸ்’ அமைப்பு சார்பில் அந்த அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே இன்று மாலை பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அறிவுச்செல்வியும், நிர்வாகிகள் கரு.நாகராஜன், சாய் சத்யன், மனோகர், நாச்சியப்பன், சுமதி வெங்கடேசன், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசும் போது கூறியதாவது;

மாற்றம் என்பது ஒரு மனிதனிடம் இருந்துதான் தொடங்க வேண்டும். மறைந்த நடிகர் விவேக் விட்டுச் சென்ற ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணியை நாம் கையில் எடுத்துள்ளோம் என்று குறிப்பிட்டார். அத்துடன், இந்த ஒரு மாதத்தில் மட்டும் ‘வி த லீடர்ஸ்’ சார்பில் 20 லட்சம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும்,  கடந்த 16 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 100 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, தாமிரபரணி, வைகை, காவிரி உள்ளிட்ட ஆறுகளைச் சுத்தம் செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், ‘வி த லீடர்ஸ்’ அமைப்பு தொடங்கப்பட்டு 73 நாட்களில் 20 லட்சம் பேர் இணைந்துள்ளதாகவும், எங்களது இலக்கு 50 லட்சம் உறுப்பினர்கள் எனவும், அந்த எண்ணிக்கையை எட்டியவுடன், இதை ஒரு அரசியல் கட்சியாக மாற்றி மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் பேசிய அண்ணாமலை, எங்களது அரசியல் என்பது டெல்லியிலோ அல்லது போயஸ் கார்டன், பனையூர், கோபாலபுரத்திலோ அமர்ந்து முடிவெடுக்கும் அரசியலாக இருக்காது என்றும், ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் அமர்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்று அறிவித்தார்.

அத்துடன், தமிழகத்தில் தற்போது புதிய முதல்வர் தலைமையில் ஆட்சி நடக்கிறது. பல எம்எல்ஏ-க்கள் முதல்முறையாகச் சட்டப்பேரவைக்குச் சென்றுள்ளனர். அவர்களுக்கு ஓராண்டு காலம் அவகாசம் கொடுப்போம் என்றும், அவர்கள் சிறப்பாகச் செயல்படட்டும். தவறுகள் நடக்கும்போது நிச்சயம் தட்டிக்கேட்போம் என்று தெரிவித்தார்.

மேலும், தற்போது தமிழக பட்ஜெட்டில் சேமிக்கப்பட்டுள்ள 15 ஆயிரம் கோடி ரூபாயில், நீர்நிலை மேம்பாடு, அரசுப் பள்ளி தரம் உயர்த்துதல் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக்கு முதல்வர் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அத்துடன், தவெக அமைச்சர்கள் சிலர் டெண்டர்களில் ஊழல் செய்யத் தொடங்கியுள்ளதாகவும், அதற்கான ஆடியோ ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்றும் பகீர் தகவலை கூறினார்.

அதற்கு முதல்வர் விஜய் தனது அமைச்சர்களுக்குக் கடிவாளம் போட வேண்டும் என்றும், என்னை இப்போதும் பாஜகவின் ‘பி-டீம்’ என்று விமர்சிக்கிறார்கள். அமித்-ஷா என்னை டெல்லிக்கு அழைத்து, டெல்லியில் பொறுப்பேற்கச் சொன்னார். ஆனால், நான் தமிழகத்திலேயே இருந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறிவிட்டேன். நான் எப்போதும் ஒரு கொள்கையுடன்தான் அரசியல் செய்கிறேன் என்று தெரிவித்தார்.

அதாவது, தனக்கு பின்வாசல் வழியாக அதிகாரத்துக்கு வர விருப்பமில்லை என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதே எனது லட்சியம் என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், கர்நாடகாவில் மேகேதாட்டு அணை கட்டுவதை ‘வி த லீடர்ஸ்’ கடுமையாக எதிர்க்கிறது என்றும், காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். இரு மாநில முதல்வர்களையும் அழைத்து பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அத்துடன், வரும் 2029 தேர்தலில் ஜென்ஸீ இளைஞர்களின் பங்கு அதிகமாக இருக்கும். பழைய பாணி தனிநபர் விமர்சன அரசியலை விடுத்து, வேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை மாற்றங்களை முன்னிறுத்தும் அரசியலையே இளைஞர்கள் எதிர்பார்க்கின்றதாக அண்ணாமலை பேசினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai says there is audio evidence that some TVK ministers have started corrupting tenders


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->