தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல்: 18 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் படுகாயம்; போர் நிறுத்தம் கேள்விக்குறி..?
18 killed and over 30 critically injured in Israeli military airstrikes on southern Lebanon
தெற்கு லெபனானின் நபாத்தியா மாவட்டத்தின் பல நகரங்கள் மீது நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் நடத்தியதில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து லெபனான் ஊடகங்களில் தெரிவித்துள்ளதாவது;
இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 04 பேர் ஹிஸ்புல்லா படையினரால் கொல்லப்பட்டதை அடுத்து, பதில் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, தெற்கு லெபனானின் பல பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினரையும் அவர்களின் உள்கட்டமைப்புகளையும் குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இஸ்ரேல், ஈரான் ஆதரவு பெற்ற அந்த அமைப்பு மீண்டும் மீண்டும் போர் நிறுத்தத்தை மீறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், இந்த தாக்குதல்கள் குறித்து ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளதாவது; தெற்கு லெபனானின் அலி அல் தாஹெர் குன்றின் அருகே முன்னேறி வந்த இஸ்ரேலியப் படையை எங்கள் போராளிகள் பதுங்கி இருந்து தாக்கியதாகவும், ஏவுகணைகள் மூலம் மூன்று டாங்கிகளை அழித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், ராக்கெட் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் மூலம் துருப்புகளை குறிவைத்ததாகவும், இன்னும் மோதல்கள் தொடர்கிறதாக கூறியுள்ளது.

ஈரானுடனான அமெரிக்க - இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதல் போர் நிறுத்தத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஏனெனில், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் லெபனானின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை இரு தரப்பினரும் மதிக்கவும் இந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது.
இந்த சூழலில் தெற்கு லெபனானில் தனது படைகளை நிறுத்தியுள்ள இஸ்ரேல், அங்கு 10 கிலோ மீட்டர் வரை தனது துருப்புகளை தக்கவைத்துக்கொள்ள முயன்று வருகிறது.
இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் அலுவலகத்துடன் இஸ்ரேல் கடுமையான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன், தெற்கு லெபனானில் உள்ள தனது படைகளை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளை நிராகரித்து வரும் இஸ்ரேல், ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
English Summary
18 killed and over 30 critically injured in Israeli military airstrikes on southern Lebanon