அழிவின் விளிம்பில் அண்ணாமலை... அவர் "நீடிக்க வாய்ப்பில்லை".. போட்டு தாக்கிய திராவிட இயக்க போர்வாள்..!!
Nanjil Sampath criticized annamalai as unlikely to last in politics
தமிழக பாஜக நிர்வாகிகள் பலர் அதிமுகவில் தொடர்ந்து இணைவது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக தொண்டர்களை தன் பக்கம் இழுத்து தான் தங்களை பெரிய கட்சியாக காட்டிக் கொள்ள திராவிட இயக்கங்கள் துடிக்கின்றன. இதிலிருந்து பாஜக தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பது வெளிப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை அதிமுகவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அதேபோன்று பல பாஜக நிர்வாகிகள் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியையும் அதிமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதற்கு அதிமுக தரப்பில் இருந்தும் பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில் திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் "அண்ணாமலை அடாவடித்தனமாக பேசி வருகிறார். அவர் அழிவின் விளிம்பில் நோக்கி சென்று கொண்டிருக்கிறார். அதைத்தான் அவருடைய பேச்சு உணர்த்துகிறது.
எந்த தலைவரும் தன்னை தலைவர் என்று சொல்லிக் கொள்வதில்லை. அவரை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கருத்து பாஜகவிற்கு உள்ளே எழுந்துள்ளது. அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க முயன்ற அவரை ஏற்க எடப்பாடி தரப்பு தயாராக இல்லை.
இன்னும் இரண்டு நாட்கள் பிறகு அவர் தமிழக பாஜக தலைவராக நீடிக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் அதிமுகவுடன் ஆன கூட்டணியை டெல்லி பாஜக விரும்புகிறது. ஆனால் இவருடைய பேச்சால் அதிமுக பாஜக கூட்டணி உடையும் நிலையில் உள்ளது" என பேசியுள்ளார்.
இந்த நிலையில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி நாட்டா நாளை தமிழகம் வர உள்ளார். இதற்கிடையே அதிமுக தலைமை கழகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Nanjil Sampath criticized annamalai as unlikely to last in politics