பாஜகவின் முருகர் பக்தர்கள் மாநாடு: 'மதத்தை வைத்து மக்களை பிளவுபடுத்த சங்கிகள் நடத்தும் மாநாடு' : அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்..!
Minister Shekar Babu criticizes BJPs Murugan devotee conference as a conference organized by Sanghis to divide people on the basis of religion
அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். பாதிக்கப்பட்டமக்களுக்கு தமிழக அரசு நிதி மற்றும் திமுக அரசின் நிதி என ஒரு குடும்பத்துக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி, மளிகை பொருட்கள், துணிமணிகள் வழங்கியுள்ளார்.
இந்த நிகழ்வின் போது ஆர்டி.சேகர் எம்எல்ஏ, மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி, காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் டில்லிபாபு, மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வுக்கு பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது; தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று உதவிகளை திமுக நிர்வாகிகள் செய்ததாகவும், சட்டமன்ற உறுப்பினர் சார்பாக உடனடியாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட்டுள்ளதாகவும், இன்றைக்கு 08 ஆயிரம் ரூபாய், 10 கிலோ அரிசி, வேட்டி, புடவை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், திமுக சார்பாக 42 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், 26 கிலோ அரிசி மற்றும் உடைகள் வழங்கப்பட்டுள்ளதோடு, பாதிக்கப்பட்ட இடம் என்பது தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்புக்கு சொந்தமானது. அங்கு 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றனர். 400 குடும்பங்களுக்கும் நிரந்தர குடியிருப்பை ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கையை முதலமைச்சர் நிச்சயம் எடுப்பார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்போது நிருபர்கள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி தாக்கப்பட்டது குறித்த கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘’இந்த விவகாரத்தில் உண்மை இருப்பின் முதலமைச்சர் இன்னார் இனியவர் என்று பார்க்க மாட்டார். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அண்ணா பல்கலைக்கழக விவகாரம் தொடர்பான தீர்ப்பு அதிமுகவிற்கு கிடைத்த வெற்றி என்கிறார்களே? ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு பச்சை பொய் பழனிசாமி என பெயர் வைத்துள்ளோம். அவர் வாயில் வந்ததை எல்லாம் சொல்கிறார் என்று குறிப்பிட்ட அவர், என்னதான் நீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அதற்கு அரசு போதிய ஒத்துழைப்பு அளித்ததால்தான் இந்த தீர்ப்பு கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாஜகவின் முருகர் பக்தர்கள் மாநாடு குறித்த நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளதாவது: தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட முருக பக்தர்கள் மாநாடு என்பது 27 அண்டை நாடுகளில் இருந்து முருக பக்தர்கள் பங்கேற்ற மாநாடு என்றும், யாரும் கூவி, கூவி அழைக்கவில்லை எனவும், யாரும் இரண்டு மாதமாக சங்கிகளை வைத்து நடத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழகத்தில் எப்போது கலவரத்தை உண்டாக்கலாம் என்று காத்திருக்கும் நபர்கள் அருகில் உட்கார்ந்து தமிழக பாஜக தலைவர் இந்த பேட்டியை கொடுக்கிறார் என்றும், பாஜகவின் இந்த மாநாடு என்பது மதத்தை வைத்து மக்களை பிளவுபடுத்த முயற்சி என்று முருக பக்தர்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றும், இந்த மாநாடு சங்கிகள் நடத்தும் மாநாடு என்று அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.
English Summary
Minister Shekar Babu criticizes BJPs Murugan devotee conference as a conference organized by Sanghis to divide people on the basis of religion