கார்த்திகை தீபம் ஹிந்துக்களின் பண்டிகை அல்ல; அமைச்சர் ரகுபதி..!
Minister Raghupathi says Karthigai Deepam is not a Hindu festival
ஹிந்துத்துவ அமைப்புகள், மதவாத அமைப்புகள் தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என முயற்சி செய்கின்றன என்றும், கார்த்திகை தீபம் என்பது ஹிந்துக்களின் பண்டிகை அல்ல. தமிழர்கள் கொண்டாடும் பண்டிகை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் குறித்து அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டியில் மேலும், கூறியதாவது :
ஹிந்துத்துவ அமைப்புகள், மதவாத அமைப்புகள் தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என முயற்சி செய்கின்றன. அதற்காக அந்த அமைப்புகள் எதை கையில் எடுப்பது என விழித்துக் கொண்டிருக்கின்றன. தற்போது திருப்பரங்குன்றத்தில் திடீர் பிரச்சினையை உருவாக்குகிறார்கள் என்றும், கார்த்திகை தீப பண்டிகை ஹிந்துப் பண்டிகை கிடையாது. அது தமிழர் பண்டிகை. உலக தமிழர்கள் கொண்டாடும் பண்டிகை என்று பேசியுள்ளார்.

அத்துடன், தற்போது கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பிரச்னையை கிளப்பியுள்ளனர். இதற்காக நீதிமன்றத்தை அணுகி ஒரு உத்தரவை பெற்றுள்ளனர். 2014-ஆம் ஆண்டு இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றநீதிபதிகள் இரண்டு பேர் கொண்ட அமர்வு, 'வழக்கமாக எந்த இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றிக் கொண்டு உள்ளோமோ அதே இடத்தில் ஏற்ற வேண்டும்,' என தீர்ப்பு அளித்துள்ளது என்று கூறியிட்டுள்ளார்.
மேலும், அதை பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள், புரிந்து கொள்ளாதவர்கள், புதிதாக ஏதோ ஒன்றை கண்டுபிடித்ததை போன்று, கார்த்திகை தீபத்தை குறிப்பிட்ட இடத்தில் ஏற்ற அனுமதி கொடுத்தனர். அதற்கு நீதிபதி அனுமதி கொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
நாங்கள் நீதிமன்றத்தையும், நீதியையும் மதிப்பவர்கள். முதல்வர் ஸ்டாலினைப் போல் சட்டத்தை மதிக்கும் முதல்வர் வேறு யாரும் கிடையாது என்றும், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று பேசியுள்ளார்.
முன்னதாக, 2014-இல் இரு நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் மேல்முறையீடு செய்யாமல் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்றால், அதனை எப்படி அனுமதிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அப்படி அனுமதி வழங்கினால், தமிழக அரசு மீது என்ன குற்றச்சாட்டு வரும் என்றும், 2014-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பை பின்பற்றி செயல்படுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது அந்த தீர்ப்பை மறந்துவிட்டு செயல்படுகின்றனர் என்றும், நீதிமன்ற தீர்ப்பை மறந்துள்ளனர். 2014 தீர்ப்பை படிக்காமல், அதனை மறந்துவிட்டு புதுக் கதையை கட்டினால் மக்கள் நம்புவார்களா? என்று அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.
அத்துடன், தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. அவர்களுக்கு இபிஎஸ் போன்ற அடிமைகள் கிடைப்பார்களே தவிர வேறு யாரும் கிடைக்க மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளதோடு, தமிழக மக்கள் சமூக நல்லிணக்கத்தை கடைபிடிப்பவர்கள். தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை ஆராய்ந்து சட்டப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இபிஎஸ்க்கு வேறு வேலை கிடையாது. தமிழக அரசு மீது குற்றம்சாட்டுவது தான் ஒரே பணி. இதற்காக அதிமுகவினர் வெட்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
English Summary
Minister Raghupathi says Karthigai Deepam is not a Hindu festival