அமைச்சர் நாற்காலியில் அமராமல் அன்புமணி பக்கத்தில் அமர்ந்த அமைச்சர் ஆனந்த்! அன்புக் கட்டளையிட்ட அன்புமணி!தலைமைச் செயலகத்தில் நடந்த சுவாரஸ்யம்!
Minister Anand sat beside Anbumani instead of in the minister chair Anbumani issued a warm directive
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்றிருந்த நிலையில், அவரை திக்குமுக்காட வைக்கும் வகையில் அமைச்சர் ஆனந்த் செய்த சில செயல்கள் கவனம் பெற்றுள்ளன. தலைமைச் செயலக வாசலுக்கே வந்து அன்புமணி உள்ளிட்டோரை வரவேற்ற அமைச்சர் ஆனந்த், பின்னர் தனது அறையில் அமைச்சர் நாற்காலியில் அமராமல் அன்புமணிக்கு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்த சம்பவம் அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் முயற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய்க்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி மற்றும் செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் குமார் உள்ளிட்டோர் சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்றிருந்தனர்.
அன்புமணி ராமதாஸ் தலைமைச் செயலகத்திற்கு வருவதை முன்கூட்டியே அறிந்த அமைச்சர் ஆனந்த், அவர்களை வரவேற்பதற்காக தனது அறையிலேயே காத்திருக்காமல் தலைமைச் செயலக வாசலுக்கே வந்தார். அங்கு அன்புமணி, சவுமியா அன்புமணி உள்ளிட்டோரை நேரில் வரவேற்று தனது அறைக்கு அழைத்துச் சென்றார்.
அமைச்சரே வாசலுக்கு வந்து தங்களை வரவேற்றதை பார்த்த அன்புமணி உள்ளிட்டோர் ஆச்சரியம் அடைந்தனர். “நாங்களே வந்திருப்போமே, நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் வந்தீர்கள்?” என்று அன்புமணி கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அமைச்சர் ஆனந்தின் அறைக்கு சென்ற அன்புமணி மற்றும் சவுமியா அன்புமணிக்கு அவர் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தார். அதேபோல் அன்புமணி ராமதாஸும் அமைச்சர் ஆனந்துக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி, அமைச்சர் ஆனந்த் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
கூட்டம் தொடங்குவதற்கு முன்பு சவுமியா அன்புமணியுடன் பேசிக் கொண்டிருந்த அன்புமணி, திடீரென தனது வலதுபுறம் திரும்பிப் பார்த்தார். அப்போது அமைச்சர் ஆனந்த் தனது அதிகாரப்பூர்வ அமைச்சர் நாற்காலியில் அமராமல், அன்புமணிக்கு அருகே இருந்த சாதாரண நாற்காலியில் அமர்ந்திருப்பதை பார்த்து அவர் திடுக்கிட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக அமைச்சர் ஆனந்திடம், “நீங்கள் அமைச்சர் இருக்கையில்தான் அமர வேண்டும்” என்று அன்புமணி கூறினார். ஆனால் அமைச்சர் ஆனந்த், “பரவாயில்லை” என்று கூறி அதே இடத்தில் அமர முயன்றதாக சொல்லப்படுகிறது.
இதனை ஏற்காத அன்புமணி, “நீங்கள் அமைச்சர் நாற்காலியில்தான் அமர வேண்டும்” என்று அன்புடன் வலியுறுத்தினார். அவரது அன்புக் கட்டளையை தொடர்ந்து அமைச்சர் ஆனந்த் தனது அதிகாரப்பூர்வ இருக்கைக்கு சென்று அமர்ந்தார்.
அமைச்சர் ஆனந்த் தலைமைச் செயலக வாசலுக்கே வந்து வரவேற்றது முதல், தனது அதிகாரப்பூர்வ இருக்கையில் அமராமல் விருந்தினருக்கு அருகே அமர்ந்தது வரை அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் அன்புமணி உள்ளிட்டோரை நெகிழ்ச்சியடைய செய்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மேகதாது அணை விவகாரம் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது. நீர்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது குழுவினர் தமிழகத்தின் நிலைப்பாடு, கர்நாடக அரசின் அணை கட்டும் முயற்சி மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் ரீதியாக வெவ்வேறு நிலைப்பாடுகள் இருந்தாலும், முக்கியமான மாநில பிரச்சினை தொடர்பாக தலைமைச் செயலகத்திற்கு வந்த அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் ஆனந்த் அளித்த வரவேற்பும், தனது இருக்கையை கூட விட்டுக் கொடுக்க முயன்ற சம்பவமும் தற்போது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
English Summary
Minister Anand sat beside Anbumani instead of in the minister chair Anbumani issued a warm directive