சிறைக்குள் கொடூரம்... இலங்கை சிறையில் வெடித்த பயங்கர வன்முறை...! - 25 கைதிகள் துடிதுடித்துப் பலி...!
Violence erupts Sri Lankan prison 25 prisoners die convulsions
இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த வன்முறை சம்பவம் இரண்டாவது நாளாகவும் நீடித்து வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு புறநகர் பகுதியில் அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று இரு கைதிக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், பின்னர் கட்டுக்கடங்காத வன்முறையாக மாறியது. பதற்றமான சூழலின் மத்தியில், பெண் கைதிகள் சிலர் சிறைச்சாலையின் கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு மேலும் தீவிரமடைந்தது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, நீர்கொழும்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த காவலர்கள் மற்றும் அதிரடிப் பாதுகாப்புப் படையினர் உடனடியாக சிறைச்சாலைக்கு விரைந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் சுமார் 1,800 சந்தேகநபர்கள் மற்றும் தண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.நேற்றைய வன்முறை சம்பவத்துக்குப் பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்திருந்தாலும், இன்று மீண்டும் கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.
பதற்றத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், அதன் சத்தம் சிறைச்சாலைக்கு வெளியே இருந்தவர்களுக்கும் கேட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வன்முறை சம்பவத்தில் பலர் படுகாயமடைந்ததுடன், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
முதல் நாளில் இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில், தற்போது பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோதலில் காயமடைந்த மற்றும் மயக்க நிலையில் இருந்த கைதிகள், சிறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பாதுகாப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் சிறை அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளதாக நீர்கொழும்பு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நிலைமையை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வன்முறைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Violence erupts Sri Lankan prison 25 prisoners die convulsions