சிகிச்சைகளின் போது ரீல்ஸ் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டல்; போராட்டத்தில் குதித்த ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள்..!
Srirangam Government Hospital doctors and nurses protest over threats by taking reels during treatments
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகளின் போது ரீல்ஸ் மற்றும் வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் பெண் ஊழியர்கள் மற்றும் செவிலியர்களை வீடியோ எடுத்து மிரட்டும் நோயாளிகளின் உறவினர்கள் செயலை கண்டித்து, ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்குள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில், மூன்று முறை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவ ஊழியர்களை வீடியோ எடுத்து மிரட்டும் செயல் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அரசியல் கட்சியினர் என்ற பெயரில் இதுபோன்ற செயலில் வீடியோ எடுப்பதை அரசு தடுத்து நிறுத்திட வேண்டும் என்று போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் பெண் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களின் பணி செயல்திறன் பாதிக்கப்படுவதாகவும், அவர்களது தனிப்பட்ட உரிமை மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாகவும் கூறியுள்ளனர். இந்த செயலை தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் அவர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்க மாநில பொருளாளர் டாக்டர் அருளீஸ்வரன் தெரிவித்துள்ளதாவது;
''கிண்டியில் கலைஞர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் மீதான தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு, அனைத்து மருத்துவமனைகளிலும் வெளிப்புற மருத்துவமனையை ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு தற்போது வரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

அரசு மருத்துவமனைகளில் வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுப்பவர்கள் மீது அரசு மருத்துவமனைகள் பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்த தாமதிக்கக் கூடாது.
தனிப்பட்ட முறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் காவல்துறையில் புகார் அளிக்க முடியாத நிலையில், மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தும், காவல்துறையிடம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தும் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இனியும் இது தொடரக்கூடாது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Srirangam Government Hospital doctors and nurses protest over threats by taking reels during treatments