மேக்கேதாட்டு அணை விவகாரம்: தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்கத் தொடர் சட்ட நடவடிக்கைகள்; முதல்வர் சி. ஜோசப் விஜய் அதிரடி அறிவுறுத்தல்!
Mekedatu Dam Issue CM Joseph Vijay Directs Urgent Legal Action to Protect Tamil Nadu Water Rights
காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்கான முயற்சிகளையும், பூமிபூஜைக்கான ஆயத்தங்களையும் தீவிரப்படுத்தி வரும் சூழலில், தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை நிலைநாட்டவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை:
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (25.05.2026) நடைபெற்ற இந்த உயர் மட்டக் கூட்டத்தில், காவிரி நதிநீர் நிபுணர்கள் மற்றும் மூத்த சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டார். இக்கூட்டத்திற்குப் பின் தமிழக அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின் விவரங்கள்:
முந்தைய சட்டப் போராட்டங்கள்: கர்நாடகா உத்தேசித்துள்ள மேக்கேதாட்டு அணைத் திட்டமானது உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்கு முற்றிலும் எதிரானது. இதனால், இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்தக் கோரி கடந்த 30.11.2018 மற்றும் 7.6.2022 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு: இவ்வழக்கை 13.11.2025 அன்று விசாரித்த உச்சநீதிமன்றம், மேக்கேதாட்டு அணைத் திட்டத்திற்கு எந்தவொரு அனுமதியையும் அளிக்கவில்லை என்றும், இத்திட்டம் தொடக்க நிலையிலேயே உள்ளது என்றும் குறிப்பிட்டது. மேலும், இத்திட்டம் முந்தைய தீர்ப்புகளுக்கு உட்பட்டதா என்பதை மத்திய நீர்வளக் குழுமம்தான் தீர்மானிக்க முடியும் எனக் கூறி வழக்குகளை முடித்து வைத்தது.
சீராய்வு மனு தள்ளுபடி & அடுத்தகட்ட நகர்வு:
உச்சநீதிமன்றத்தின் கடந்த ஆண்டு (13.11.2025) தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசால் 11.12.2025 அன்று சீராய்வு மனு (Review Petition) தாக்கல் செய்யப்பட்டது.
முதல்வரின் அதிரடி உத்தரவு: முந்தைய ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்பட்டு, உள்விசாரணைக்குப் பின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த அந்தச் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது. இந்தத் தீர்ப்பு விவரங்களை ஆலோசித்த முதல்வர் சி. ஜோசப் விஜய், தமிழ்நாட்டின் உரிமையை எந்தக் காலத்திலும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும், அடுத்தகட்டமாக உடனடியாக எடுக்கப்பட வேண்டிய தொடர் சட்ட நடவடிக்கைகளை மிக விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்குக் கடுமையான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
தமிழகத்தின் நிலைப்பாடு:
கர்நாடக அரசு மேக்கேதாட்டு பகுதியில் அணைக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க உச்சநீதிமன்றம் தடை விதிக்காத சூழலைப் பயன்படுத்த முயல்கிறது. ஆனால், தவெக அரசு காவிரி டெல்டா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கர்நாடகாவின் பூமிபூஜை உள்ளிட்ட அடுத்தகட்ட நகர்வுகளை நீதிமன்றம் மூலம் முறியடிக்க அனைத்து சட்ட வழிமுறைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது இக்கூட்டம் மூலம் உறுதியாகியுள்ளது.
English Summary
Mekedatu Dam Issue CM Joseph Vijay Directs Urgent Legal Action to Protect Tamil Nadu Water Rights