விஜய்க்கு அழைப்பு விடுத்து மீண்டும் வேண்டாம் என்ற வைகோ! காரணம் என்ன? முதல்வருடன் சந்திப்பில் விளக்கம்!
Vaiko invited Vijay but then withdrew the invitation what is the reason An explanation was given during the meeting with the Chief Minister
தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள் தீவிரமாக பேசப்பட்டு வரும் நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதலமைச்சர் விஜயை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க வேண்டாம் என்று தாமே கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.
வைகோ எழுதியுள்ள நாடாளுமன்ற செயல்பாடுகள் குறித்த ஆங்கில நூலின் முதல் பிரதியை, டெல்லியில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் விஜய் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அந்த நூலை ராகுல் காந்தி வெளியிட வேண்டும் என்றும் முதலில் திட்டமிடப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.
ஆனால், இந்தத் தகவல் வெளியான பிறகு பல்வேறு தரப்பினரிடமிருந்து விழாவில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து ஏராளமான கோரிக்கைகள் வந்ததாக வைகோ தெரிவித்தார்.
"நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் சுமார் 700 பேர் மட்டுமே அமர முடியும். வெளியே கூடுதல் ஏற்பாடுகள் செய்தாலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களையே அனுமதிக்க முடியும். ஆனால் முதலமைச்சர் விஜய் வருவார் என்ற தகவல் வெளியானதும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க விருப்பம் தெரிவித்தனர். இதனால் கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று கருதினேன்" என்று அவர் விளக்கமளித்தார்.
இதன் காரணமாக, முதல்வர் விஜய் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று நேரில் சந்தித்து கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு பதிலாக தனது ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியாகிய பிறகு, சென்னை நகரில் நடைபெறும் விழாவில் அந்த நூலை முதல்வர் விஜய் வெளியிட வேண்டும் என்று கேட்டதாகவும் வைகோ தெரிவித்தார்.
இதற்கு முதலமைச்சர் விஜய் மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்ததாகவும், தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதாக உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், தனது நூலின் முன்னுரையில் திமுகவுக்கும், அக்கட்சியின் முன்னாள் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளதாகவும் வைகோ குறிப்பிட்டார்.
வைகோவின் இந்த விளக்கம், விஜய் டெல்லியில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்காததற்கான காரணம் அரசியல் அல்ல; கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான நடைமுறை சிக்கல்கள்தான் என்பதை தெளிவுபடுத்தியதாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.
English Summary
Vaiko invited Vijay but then withdrew the invitation what is the reason An explanation was given during the meeting with the Chief Minister