நெருங்கும் மதிமுக - தவெக கூட்டணி!முதல்வர் விஜய் உடன் சந்திப்பு! இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ?
MDMK TVK alliance nearing fruition Meeting with Chief Minister Vijay Will Vaiko enter the fray in the byelection
சென்னை, ஜூன் 18: தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய்யை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்துப் பேசியது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து தவெகவில் இணைந்து வரும் சூழலில், இந்தச் சந்திப்பு திமுக கூட்டணி வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாளை சட்டப்பேரவை கூட்டம் கூடவுள்ள நிலையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கோட்டை வட்டாரத் தகவல்களின்படி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்கக் கூடாது என முதல்வர் விஜய்யிடம் வைகோ வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பில் அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா ஆகியோரும் உடன் இருந்தனர். முன்னதாக, பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்திருந்ததும் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
மதிமுக மற்றும் தவெக இடையிலான அரசியல் நெருக்கம் குறித்து அண்மைக் காலமாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, திருச்சி மக்களவை உறுப்பினர் துரை வைகோ சமீபத்தில், “மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிருஷ்டவசமானது; அதனால் விஜய்க்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை” என்று பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சிபிஐ, சிபிஐ(எம்) உள்ளிட்ட கட்சிகளின் எதிர்கால நிலைப்பாடு குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவி வரும் நிலையில், வைகோ-விஜய் சந்திப்பு மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற மதிமுக, உதயசூரியன் சின்னத்தில் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும், கட்சிக்குள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதற்கான அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது.
முதல்வராக பதவியேற்ற பிறகு விஜய், மரியாதை நிமித்தமாக வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார். மேலும், திருச்சி கிழக்கு தொகுதி நன்றி தெரிவிப்பு நிகழ்ச்சியில் துரை வைகோ நேரில் சென்று விஜய்யை சந்தித்ததும் இரு தரப்புக்கும் இடையிலான அரசியல் நெருக்கம் குறித்து பேசப்பட்டது.
இதற்கிடையில், மதிமுக திமுக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும், எதிர்காலத்தில் தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என்றும் அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மதிமுகவின் இரண்டு எம்.எல்.ஏக்கள் பதவி விலகி இடைத்தேர்தல் ஏற்பட்டால், அதில் ஒரு தொகுதியில் வைகோ நேரடியாக களமிறங்கலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.
இருப்பினும், இந்த தகவல்கள் குறித்து மதிமுக அல்லது தவெக தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதனால், இந்தச் சந்திப்பு மரியாதை நிமித்தமானதா அல்லது புதிய அரசியல் சமன்பாடுகளுக்கான தொடக்கமா என்பது வரும் நாட்களில் தெளிவாகும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
English Summary
MDMK TVK alliance nearing fruition Meeting with Chief Minister Vijay Will Vaiko enter the fray in the byelection