"எம்.எல்.ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டனர்" - திமுக கூட்டணியை முறித்த வைகோவின் அடுத்த அதிரடி!
MDMK MLAs Refuse to Resign Despite Alliance Break Vaiko Opens Up
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ள நிலையில், அக்கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களான சீர்காழி செந்தில்செல்வன் மற்றும் கடையநல்லூர் ராஜேந்திரன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய மறுத்துவிட்ட விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதன் காரணமாக, அவர்கள் இருவரும் சட்டமன்றத்தில் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏ-க்களாகவே நீடிப்பார்கள் என்று தெரியவந்துள்ளது.
எம்.எல்.ஏ-க்களின் நிலைப்பாடு குறித்து வைகோ விளக்கம்
கட்சியின் பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு இந்த விவகாரம் குறித்துப் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "மதிமுகவின் இரண்டு எம்.எல்.ஏ-க்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தால், அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும். அப்படி இடைத்தேர்தல் வந்தால் நானே நேரடியாக வந்து உங்களுக்காகத் தீவிரப் பிரசாரம் மேற்கொள்வேன் என்று அவர்களிடம் கூறினேன். ஆனால், சீர்காழி எம்.எல்.ஏ செந்தில்செல்வன் அதற்குப் பதிலே சொல்லாமல், தான் திமுகவிலேயே தொடரப் போவதாகக் கூறிச் சென்றுவிட்டார். மற்றொரு புறம், கடையநல்லூர் எம்.எல்.ஏ ராஜேந்திரன், தான் மதிமுகவில்தான் நீடிப்பேன் என்றும், அதே சமயம் எம்.எல்.ஏ பதவியைத் துறக்காமல் தொடர்வேன் என்றும் கூறியுள்ளார்" எனத் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற உயர்நிலைக் குழு மற்றும் இன்றைய பொதுக்குழு ஆகிய இரு முக்கியக் கூட்டங்களையும் இந்த இரண்டு எம்.எல்.ஏ-க்களும் முழுமையாகப் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி முறிவிற்கான காரணங்களை அடுக்கினார்
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதற்கான அரசியல் மற்றும் தனிப்பட்ட காரணங்களை வைகோ மிகவும் வேதனையுடன் பகிர்ந்துகொண்டார். "பாஜக போன்ற மதவாத சக்திகளை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான் நாம் திமுகவை ஆதரித்தோம். ஆனால், தொகுதிப் பேச்சுவார்த்தையின் போது என்னைச் சந்திக்கக்கூட மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டார். மேலும், 'நேரம் கேட்டு எங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம்' என்றும் கூறினார்.
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கத் திமுக முயற்சி செய்கிறது. ஐயூஎம்எல், விசிக போன்ற கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு கொடுத்து அமைச்சர்களாகியுள்ளனர். நாம் தவெக-வுக்கு ஆதரவு தராதபோதும், திமுகவினர் எங்களை ஏன் பொதுவெளியில் அசிங்கமாகப் பேசினீர்கள்? கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஒரு திருமண விழாவில் ஸ்டாலினைச் சந்தித்தேன். என் அருகே சோபாவில் இடம் இருந்தும் அவர் அமரவில்லை. அவர் சீமானிடம் மட்டுமே பேசிக் கொண்டிருந்தார், என் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை" என்று வைகோ தனது நெஞ்சிலிருக்கும் குமுறல்களை வெளிப்படுத்தினார். இந்த அரசியல் நகர்வுகளால் மதிமுக மற்றும் திமுக இடையேயான 9 ஆண்டுகாலக் கூட்டணி முற்றிலும் முடிவுக்கு வந்துள்ளது.
English Summary
MDMK MLAs Refuse to Resign Despite Alliance Break Vaiko Opens Up