பணிந்தது மராட்டிய அரசு! 'ஹிந்தி'யாவாக மாற்ற நினைக்கும் பாஜகவின் முயற்சி வெற்றி பெறாது...! - சு. வெங்கடேசன்
Maharashtra government has bowed down BJPs attempt to make it Hindi will not succeed S Venkatesan
மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு, மகாராஷ்டிராவில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை, 3வது மொழியாக 'இந்தி' கற்பிக்கப்படும் என்ற தீர்மானத்தை திரும்பப் பெற்றதாக அறிவித்துள்ளது.

மேலும் மராட்டிய மாநில அரசு, மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை திட்டத்தின் மூலம், மராட்டிய மாநிலம் முழுவதுமுள்ள மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தியை கட்டாய 3-வது மொழியாக மாற்றப்படும் என அறிவித்திருந்தது.
இதில் இந்தித் திணிப்புக்கு எதிராக மும்பையில் ஜூலை 5ம் தேதி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என காங்கிரஸ், நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்திருந்த நிலையில் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேவேந்திர பட்னாவிஸ்:
இதுதொடர்பாக மராட்டிய முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவிக்கையில், "பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை வழங்க கல்வியாளர்கள் குழு ஒன்று அமைக்கப்படும். வல்லுநர் குழு அமைத்து, அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்" என்று அறிவித்தார்.
சஞ்சய் ராவத்:
இது குறித்து உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் தெரிவிக்கையில், "அரசாணைகள் திரும்ப பெறப்பட்டது மராத்திய அமைப்புகளின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி" என்று தெரிவித்தார்.
சு.வெங்கடேசன்:
இந்த சூழ்நிலையில், இது தொடர்பாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டதாவது, "மூன்றாம் மொழியாக இந்தியை திணிக்கும் முடிவு ரத்து. மீண்டும் பணிந்தது மராட்டிய அரசு. இந்தியாவை ஹிந்தியாவாக மாற்ற நினைக்கும் பாஜகவின் முயற்சி ஒரு போதும் வெற்றிபெறாது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Maharashtra government has bowed down BJPs attempt to make it Hindi will not succeed S Venkatesan