சீமான் குறித்து அவதூறு: இரு யூடியூபர்கள் மீது வழக்குப் பதிவு!
Madras High Court Slams Police Bias Orders FIR Against Two YouTubers for Defaming NTK Leader Seeman
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்துச் சமூக வலைத்தளங்களில் மிகவும் கொச்சையாகவும் அவதூறாகவும் வீடியோக்களை வெளியிட்ட யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் ஆகியோர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, மதுரை சைபர் கிரைம் காவல்துறையினர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
நீதிமன்றப் படியேறிய விவகாரம்
சீமானை இலக்கு வைத்துத் தொடர்ந்து தரக்குறைவான வீடியோக்கள் வெளியிடப்படுவது குறித்து, வழக்கறிஞர் தீரன் திருமுருகன் என்பவர் கடந்த ஜூலை 3-ஆம் தேதி காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். இருப்பினும், முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்படாததால், அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி விக்டோரியா கௌரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ஆளுங்கட்சி மீதான விமர்சனங்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, சீமான் குறித்த புகாரில் மட்டும் பாரபட்சம் காட்டுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
காவல்துறைக்குக் கண்டனமும் சீமான் குறித்த பார்வையும்
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி விக்டோரியா கௌரி, ஆளுங்கட்சிக்கு எதிராகப் பேசினால் உடனே நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, மற்ற தலைவர்களின் விவகாரங்களில் மட்டும் காலதாமதம் செய்வதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், தேர்தலில் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, தற்போதைய அரசியல் சூழலில் சீமான் தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத ஒரு முக்கிய அரசியல் தலைவர் என்றும், அவரைப் பற்றி மிகவும் கீழ்த்தரமாக விமர்சிப்பதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்க முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
வழக்கின் தீவிரத்தைக் கருத்தில் கொண்ட நீதிபதி, யூடியூபர்கள் பிஸ்மி மற்றும் தமிழன் கோகுல் மீது சைபர் கிரைம் போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, முதற்கட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், இணையதளங்கள் மற்றும் யூடியூப்பில் பரப்பப்பட்டுள்ள அந்த அவதூறு வீடியோக்களை உடனடியாக நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். இதன் அடிப்படையிலேயே தற்போது மதுரை சைபர் கிரைம் காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.
English Summary
Madras High Court Slams Police Bias Orders FIR Against Two YouTubers for Defaming NTK Leader Seeman