தமாகா கட்சியின் நன்கொடை விபரம்: அறிக்கையை ஏற்க கோரி ஜி.கே.வாசன் வழக்கு: தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
Madras High Court orders Election Commission to accept report on Tamakha party donation details in GK Vasan case
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஒவ்வொரு நிதியாண்டும் அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு அறிக்கை தாக்கல் செய்தால் மட்டுமே அந்த நன்கொடைக்கு வருமான வரி விலக்கு வழங்கப்படும்.
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, நன்கொடை குறித்து தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஏற்க வேண்டும் என கோரி, தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2018-2019, 2019- 2020 ஆகிய நிதியாண்டுகளில் நன்கொடை குறித்த அறிக்கை தாமதமாக தாக்கல் செய்தது. அதன் காரணமாக இந்த இரு நிதியாண்டுகளுக்கும் வருமான வரிவிலக்கு வழங்க வருமான வரித்துறை மறுத்துள்ளது.

அத்துடன், தமாகா-வுக்கு வருமான வரித்துறை முறையே 66.76 லட்சம் ரூபாயும், 1.07 கோடி ரூபாயும் செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியு ள்ளது. இதன் காரணமாக 2018-19 மற்றும் 2019-20 நிதியாண்டுகளில் பெற்ற நன்கொடை குறித்து தாமதமாக அளித்த அறிக்கையை ஏற்க கோரி தேர்தல் ஆணையத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் விண்ணப்பிக்கப்பட்டது.
ஆனால், தாமதத்தை சட்டப்படி ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் விண்ணப்பத்தை நிராகரித்து மே 13-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்து, நன்கொடை குறித்த அறிக்கையை ஏற்க உத்தரவிட வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவில், 2018 -19-ஆம் ஆண்டு எந்த அலுவலகத்தில் இருந்து அறிக்கை தாக்கல் செய்வது என்ற குழப்பம் காரணமாக தாமதம் ஏற்பட்டது என்றும், 2019-20-ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக தாமதம் ஏற்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இரு ஆண்டும் முறையாக வருமான வரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகளான செந்தில்குமார் ராமமூர்த்தி, தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்தல் ஆணையம் இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 18ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
Madras High Court orders Election Commission to accept report on Tamakha party donation details in GK Vasan case