அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல், அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதால்... டாக்டர் கிருஷ்ணசாமி பரபரப்பு அறிக்கை!
Karur Stampede TVK Vijay Supreme Court PT Krishnasami DMK
கரூர் விஜய் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் - உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது வரவேற்கத்தக்கது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "செப்டம்பர் 27ஆம் தேதி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் அவர்களின் பரப்புரை நிகழ்ச்சியில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம், தமிழகத்தைத் தாண்டி உலகெங்கும் பேரதிர்ச்சியை உருவாக்கியது.
சம்பவம் அறிந்த அடுத்த நாளே காலை 11 மணிக்குச் சம்பவ இடத்திற்குச் சென்று, விஜய் அவர்களுக்குப் பரப்புரை செய்ய ஒதுக்கப்பட்ட இடம் எவ்விதத்திலும் போதுமானதல்ல; எல்லாத் தவறுகளும் அப்புள்ளியிலிருந்தே தொடங்குகின்றன என்று நாம் கருத்து தெரிவித்ததோடு மட்டுமின்றி, சம்பவத்திற்குக் காரணமான அனைத்து உண்மைகளும் வெளிவர வேண்டுமெனில் நடுநிலையோடு செயல்படும் வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஓர் ஆணையம் அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனப் பத்திரிகையாளர்களைச் சந்தித்துக் கருத்து தெரிவித்திருந்தோம்.
இப்பொழுது, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் சார்பாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. விசாரணையும், அதைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது வரவேற்கத் தகுந்ததாகும்.
அரசியலை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் போது இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது தொடர்கதையாகின்றன. தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில் யார் பதவிக்கு வந்தாலும் நடைபெறும் தவறுகளுக்கு இது ஓர் எச்சரிக்கையாக இருக்கும்.
எனவே, இச்சம்பவத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது.
புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாட்டையே, உச்ச நீதிமன்றமும் எடுத்திருப்பதிலிருந்து நியாயத்தின் பக்கமே புதிய தமிழகம் கட்சி என்றென்றும் நிற்கிறது என்பது மேலும் உறுதியாகிறது"என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Karur Stampede TVK Vijay Supreme Court PT Krishnasami DMK