''காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டதாக திமுக கூறுவதை ஏற்க முடியாது; துரோக பழியை எங்கள் மீது மட்டும்தான் சுமத்துவீர்களா..?'' கார்த்தி சிதம்பரம் எம்.பி..!
Karti Chidambaram MP says DMKs claim of stabbing Congress in the back is unacceptable
'காங்கிரஸ் எங்களை முதுகில் குத்திவிட்டது என திமுகவினர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது' என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் கூறியதாவது;
தவெக அரசு யாரையும் (அதிமுக) தங்களுடன் சேர்த்துக் கொள்ள தேவையில்லை. யாரும் அவர்களை விட்டுவிட்டு போக மாட்டார்கள். அதை தவெகவினர் புரிந்துகொள்ள வேண்டும். இது எனது எண்ணம் என்று தெரிவித்தார்.
அதாவது, ஒரு கட்சியாக வந்து ஆதரவு தெரிவித்தால், அதை ஏற்றுக் கொள்ளலாம் என்றும், தனி நபர்களை இழுந்து எம்எல்ஏக்கள் ஆக்க வேண்டும் என்ற நிலையில் அவர்கள் இல்லை என்பதை உணர வேண்டும் குறிப்பிட்டார்.

மேலும், பழநி விவகாரத்தில் தவெக அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாஜக நாடாளுமன்றத்தில் தொகுதி வரையறை மசோதாவை கொண்டுவர முயற்சி செய்து வருகிறது என்று கூறியதோடு, அதற்கு அவர்கள் டார்கெட் செய்யக்கூடிய கட்சிகளில் திமுகவும் ஒன்று என்றும், அதற்கு திமுக அடிபணியாமல் அவர்களில் கொள்கையில் நிற்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன், ஒவ்வொருவருக்கும் ஒரு தனி ஸ்டைல் இருக்கும் என்றும், அதன்படி முதல்வர் விஜய் பேசுகிறார் எனவும், தவெகவினருக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். பட்ஜெட் தாக்கல் செய்யட்டும். இரண்டு மாதங்களில் அவர்களை எடை போட முடியாது என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், லாக்-அப் மரணங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதை கடுமையாக எதிர்ப்பதாகவும், டிஜிபி முதல் கான்ஸ்டபிள் வரை எல்லோருக்கும் திரும்பவும் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அத்துடன், தமிழகத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நாங்கள் திமுகவுடன் இருந்திருந்தாலும், அவர்களால் அரசாங்கம் அமைத்திருக்க முடியாது. நாங்கள் சென்றதால் அவர்களுக்கு எந்த வாய்ப்பும் மறுக்கப்படவில்லை. 'எங்களை காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டனர்' என திமுகவினர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.
மேலும், இந்த துரோக பழியை காங்கிரஸ் மீது மட்டும்தான் சுமத்துவீர்களா? என்று கேள்வி எழுப்பியதோடு, கொள்கையில் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை என்றும், மதச்சார்பின்மை கொள்கையில் உறுதியாக இருக்கிறோம் என்று குறிப்பிட்டார். அத்துடன், தமிழகத்துக்கு நிலையான ஆட்சி தேவையா, இன்னொரு சட்டப்பேரவை தேர்தல் தேவையா? அதன் அடிப்படையில்தான் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம் என்று கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறினார்.
English Summary
Karti Chidambaram MP says DMKs claim of stabbing Congress in the back is unacceptable