லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு நானும் தயார்.. எப்போது வேண்டுமானாலும் வரலாம்.. ஜெயக்குமார்.!!
jayakumar says about ex minister home raid
எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், பி.தங்கமணி ஆகிய அதிமுக முன்னாள் அமைச்சர்களை தொடர்ந்து தற்போது கே.பி.அன்பழகனும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேடாக சொத்துக்களை குவித்த அமைச்சர்களை கட்டம் கட்டி, தற்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்தது லஞ்ச ஒழிப்பு துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது. முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவராக விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு வருகின்றனர்.
முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அவர் தொடர்புடைய இடங்கள் என 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து தற்போது சோதனையானது நடைபெறுகிறது.
வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது, முன்னாள் அமைச்சர்களை குறி வைத்து சோதனை நடத்துவதா? என கேள்வி எழுப்பி உள்ளார். கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் ரெய்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி என தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுகவை அழித்து நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதே திமுகவின் நோக்கம். சட்டமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த மு.க.ஸ்டாலின் தயாரா? தேர்தலை நடத்தினால் ஒரு தொகுதியில் கூட திமுக ஜெயிக்காது. லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு நானும் தயார், எப்போது வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்புத்துறை எனது வீட்டுக்கு வரலாம் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
English Summary
jayakumar says about ex minister home raid