தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டிற்கு முதல்வர் விஜய்யை அழைக்க திருமாவளவன் திட்டம்? இது பெரிய கணக்கா இருக்கே?
Is Thirumavalavan planning to invite Chief Minister Vijay to the Tamil Nationalist Resurgence Conference That seems like a major strategic move
சென்னை: விசிக தலைவர் திருமாவளவன், ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தனது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடத்தப்படும் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில் தமிழக முதல்வர் விஜய்யை சிறப்பு விருந்தினராக அழைக்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் ஏற்பாட்டில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்தார். அப்போது, தனது நாடாளுமன்ற உரைகள் தொகுக்கப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில் முதல் பிரதியை விஜய் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வைகோ அழைப்பு விடுத்ததாகவும், அதற்கு முதல்வர் விஜய் சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, மதிமுக மற்றும் தவெக இடையிலான அரசியல் நெருக்கம் குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், அதேபோன்ற முறையில் தனது நிகழ்ச்சிக்கும் முதல்வர் விஜய்யை அழைக்க வேண்டும் என்ற யோசனையில் திருமாவளவன் இருப்பதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி தனது பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாள் எனக் கொண்டாடி வரும் விசிக, இந்த ஆண்டு அதை தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடாக பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்திய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு நடைபெறும் முதல் பெரிய நிகழ்வு என்பதால், மாநாட்டை மாநில மற்றும் தேசிய அரசியல் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடத்த விசிக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனையில், வைகோ தனது நூல் வெளியீட்டு விழாவில் விஜய்யை பங்கேற்க அழைத்திருப்பதைப் போல, தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டிற்கும் முதல்வர் விஜய்யை அழைப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விஜய் மற்றும் திருமாவளவன் ஒரே மேடையில் தோன்றுவது தமிழக அரசியலிலும், தேசிய அரசியல் வட்டாரத்திலும் முக்கியமான அரசியல் செய்தியை ஏற்படுத்தக்கூடும் என விசிக வட்டாரங்கள் கருதுகின்றன.
அதேநேரத்தில், “தமிழக அரசியலில் விசிக தவிர்க்க முடியாத சக்தி” என்றும், “விசிக இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது” என்றும் திருமாவளவன் அண்மைக் காலமாக தொடர்ந்து வலியுறுத்தி வருவது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை முதல்வர் விஜய் மற்றும் அவரது ஆலோசகர்களும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
இருப்பினும், தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டில் முதல்வர் விஜய் பங்கேற்பாரா என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. திருமாவளவன் விரைவில் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து அழைப்பு விடுப்பார் என்ற தகவல்கள் மட்டும் அரசியல் வட்டாரங்களில் பரவி வருகின்றன.
இந்தச் சந்திப்பு மற்றும் மாநாட்டில் விஜய்யின் பங்கேற்பு உறுதியாகும் பட்சத்தில், அது தமிழக அரசியலில் புதிய கூட்டணி கணக்குகள் மற்றும் அரசியல் செய்திகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
English Summary
Is Thirumavalavan planning to invite Chief Minister Vijay to the Tamil Nationalist Resurgence Conference That seems like a major strategic move