செல்வப் பெருந்தகையை கழற்றி விடும் காங்கிரஸ்? தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர்? கசிந்த தகவல்!
Is the Congress dropping Selvaperunthagai Will Manickam Tagore become the Tamil Nadu Congress President Leaked information
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் விரைவில் தலைமை மாற்றம் நிகழலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. செல்வப்பெருந்தகையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், இந்த மாதமே அவர் பதவி விலகலாம் என கூறப்படுகிறது. இந்த சூழலில், விருதுநகர் தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் அடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதி என சத்யமூர்த்தி பவன் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்றார். அவரது தலைமையில் கட்சி செயல்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் எதிர்பார்த்த அளவிலான வெற்றியைப் பெறவில்லை. திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் ஐந்து தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும், செல்வப்பெருந்தகை தனது சொந்த தொகுதியான ஸ்ரீபெரும்புதூரிலேயே தோல்வியடைந்தது கட்சிக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அரசியல் பொறுப்புணர்வின் அடிப்படையில் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார். இதையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸின் அடுத்த தலைமை யாருக்கு என்பது குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.
தேர்தல் வேட்பாளர் தேர்வு மற்றும் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக கட்சிக்குள் அதிருப்தி நிலவியதாகவும் கூறப்படுகிறது. சில நிர்வாகிகள் வேட்பாளர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என குற்றம்சாட்டியிருந்தனர். குறிப்பாக, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி முன்வைத்த குற்றச்சாட்டுகள் அப்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தின.
இந்த சூழலில், மாநில அமைப்பை மறுசீரமைத்து கட்சிக்கு புதிய உற்சாகத்தை அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தேர்தல் காலத்தில் மாநில காங்கிரஸ் திமுகவுக்கு ஆதரவாகவே அதிகம் செயல்பட்டது என்ற விமர்சனங்களும் தேசிய தலைமையின் கவனத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், செல்வப்பெருந்தகையின் மகள் திருமணம் ஜூன் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அதற்குப் பிறகே தலைமை மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் வேகமெடுக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருக்கான போட்டியில் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், கரூர் எம்.பி. ஜோதிமணி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகியான செல்வகுமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக கருதப்படும் மாணிக்கம் தாகூர் தற்போது முன்னிலை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில், இளம் தலைமையை முன்னிறுத்தும் வகையில் புதிய தலைவரை தேர்வு செய்ய தேசிய தலைமை விருப்பம் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் அடுத்த சில வாரங்களில் தமிழ்நாடு காங்கிரஸில் முக்கிய அரசியல் மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இதுவரை காங்கிரஸ் மேலிடம் அல்லது சத்யமூர்த்தி பவன் தரப்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே நேரத்தில், அடுத்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் யார் என்ற கேள்விக்கான பதில் விரைவில் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
English Summary
Is the Congress dropping Selvaperunthagai Will Manickam Tagore become the Tamil Nadu Congress President Leaked information