அ.தி.மு.க. ஒன்றிணைப்பு கனவு தள்ளிப் போகிறதா? -செங்கோட்டையனின் விளக்கம் அதிர்ச்சி
Is the AIADMK merger dream being postponed Sengottaiyan s shocking explanation
அ.தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வலியுறுத்தியதும், அதற்கான நடவடிக்கையை 10 நாட்களுக்குள் எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதும் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஆனால், அவரது இந்த கருத்துக்கு அ.தி.மு.க. நிர்வாகிகளிடமோ, தொண்டர்களிடமோ ஆதரவு கிடைக்கவில்லை.
இதேவேளை சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோர் செங்கோட்டையனுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். இதன் மூலம் மூவரும் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவார்களா என்ற ஆர்வம் எழுந்தது. ஆனால், அந்த முயற்சி நீண்டுநீண்டு மௌனமாய் மாறியது.

இந்நிலையில், செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டியில், “நான் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. பேச்சுவார்த்தையை 10 நாளுக்குள் தொடங்க வேண்டும் என்று தான் கூறினேன். அதை பத்திரிகையாளர்கள் தவறாக புரிந்துகொண்டனர்,” என்று விளக்கம் அளித்து தன் முந்தைய கருத்தில் இருந்து மென்மையாக பின்வாங்கினார்.
அதன் பின்னர் பத்திரிகையாளர்கள் “கட்சியில் ராணுவ கோப்பு போல் ஒழுங்குமுறை நிலவி வருகிறதே?” என்று கேள்வி எழுப்பியபோது, செங்கோட்டையன் சிரித்தவாறு, “அது உங்கள் கருத்து” என்று மட்டும் கூறி பதிலை தவிர்த்தார்.அதன் பின்னர், சென்னையை அடுத்த பூஞ்சேரியில் நடைபெற்ற அ.தி.மு.க. எம்.பி. சி.வி. சண்முகத்தின் இல்ல திருமண விழாவில் செங்கோட்டையனும் கலந்து கொள்ள வந்தார்.
ஆனால் அதே விழாவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் முன்னதாகவே வந்திருந்தார். இதனால், மண்டபத்துக்குள் உடனே செல்லாமல், காரிலேயே நீண்ட நேரம் காத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எடப்பாடியை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்கும் வகையில் இருந்ததாக கட்சித் தரப்பினர் கூறுகின்றனர்.
இதனால் “அ.தி.மு.க. இணைப்பு விவகாரம் இன்னும் தள்ளிப்போகிறதா?” என்ற கேள்வி மீண்டும் தலைதூக்கியுள்ளது. அரசியல் வட்டாரங்கள், “நல்லதே நடக்கும் எனச் சொன்ன செங்கோட்டையன், தற்போது பின்வாங்கி நழுவிவிட்டார்” என கருத்து தெரிவிக்கின்றன.
English Summary
Is the AIADMK merger dream being postponed Sengottaiyan s shocking explanation