விஜய்யை பிரதமர் வேட்பாளர் என பேசுவது ரசிகர் மன்ற மனநிலையா? – மாணிக்கம் தாகூருக்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலடி
Is talk of Vijay as a Prime Ministerial candidate merely a reflection of fan club mentality Minister Nirmal Kumar hits back at Manickam Tagore
விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தவெக அமைச்சர்கள் வெளியிடும் கருத்துகள் ரசிகர் மன்ற மனநிலையிலேயே இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்திருந்த நிலையில், அதற்கு அமைச்சர் நிர்மல் குமார் பதிலளித்துள்ளார்.
தமிழக மின் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது, மாணிக்கம் தாகூரின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஒரு சில அமைச்சர்கள் அளித்த பேட்டிகளின் அடிப்படையில்தான் மாணிக்கம் தாகூர் அந்த கருத்தை தெரிவித்திருப்பதாக கூறினார்.
இதுகுறித்து நிர்மல் குமார் கூறுகையில், “ஒரு சில பேர் கொடுத்த பேட்டியின் அடிப்படையில்தான் மாணிக்கம் தாகூர் சொல்லியிருக்கிறார். எங்கள் தலைவர் விஜய் குறித்து அவர் பேசவில்லை. ஒரு சில அமைச்சர்கள் பேசியது பற்றித்தான் மாணிக்கம் தாகூர் பதிலளித்திருக்கிறார். எங்கள் தலைவர் குறித்து அவர் பேசவில்லை” என்றார்.
மேலும், தவெகவுக்கு எம்பிக்கள் இருந்தால்தான் இந்தியா கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம் என்று மாணிக்கம் தாகூர் கூறியிருப்பது குறித்தும் நிர்மல் குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், தற்போதைய சூழலில் அமைச்சர்கள் பேசிய கருத்துகளை மட்டுமே வைத்து காங்கிரஸ் தலைவர் பதிலளித்து வருவதாகவும், விஜய் குறித்து அவர் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதனிடையே எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் கார் வழங்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்தும் நிர்மல் குமார் கடுமையாக விமர்சனம் செய்தார். மக்கள் பிரதிநிதிகள் தங்களது தொகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து பணியாற்றுவதற்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
“தாசில்தாருக்கும், வருவாய் ஆய்வாளருக்கும் கார் இருக்கிறது. எம்எல்ஏவுக்கு கார் இருக்கக்கூடாதா? மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து செயல்படுவதற்காகத்தான் கார் வழங்கப்படுகிறது” என்று நிர்மல் குமார் கூறினார்.
தொடர்ந்து திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் பணம் கொடுக்காமல் பணிகள் நடைபெற்றதா என கேள்வி எழுப்பிய அவர், கடந்த காலங்களில் கட்சி நிதி என்ற பெயரில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டினார்.
மேலும், டாஸ்மாக் உள்ளிட்ட விவகாரங்களில் முறைகேடு இருந்தால் அதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குகள் தொடரப்படும் என்றும், திமுகவினரை பழிவாங்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்தார். “தவறு இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை” என நிர்மல் குமார் கூறினார்.
இதன்மூலம் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தொடர்பான தவெக அமைச்சர்களின் கருத்துகளுக்கும், இந்தியா கூட்டணி தொடர்பான காங்கிரஸின் நிலைப்பாட்டுக்கும் இடையே அரசியல் விவாதம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
English Summary
Is talk of Vijay as a Prime Ministerial candidate merely a reflection of fan club mentality Minister Nirmal Kumar hits back at Manickam Tagore