தவெகவில் பதவி பஞ்சாயத்து தீவிரம்! தவெகவுக்குள் வெக்ஸ் ஆன அதிமுக வி.ஐ.பி.க்கள்! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்கிறது?
Intense squabbling over posts within TVK AIADMK VIPs frustrated with the party What does the intelligence report say
தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) சீனியர்-ஜூனியர் மோதல் நீடித்து வரும் நிலையில், அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து இணைந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கு உடனடியாக கட்சிப் பொறுப்புகள் மற்றும் வாரியப் பதவிகள் வழங்க வேண்டும் என தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் விஜய் மக்கள் இயக்கத்தில் பணியாற்றிய சீனியர் நிர்வாகிகளுக்கு எதிர்பார்த்த அளவிலான பதவிகள் வழங்கப்படவில்லை என்ற அதிருப்தி கட்சிக்குள் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. கட்சிப் பொறுப்புகளில் 60 சதவீதம் மட்டுமே சீனியர்களுக்கு கிடைத்ததாகவும், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்ட வெளியில் இருந்து வந்தவர்களுக்கு உயர்பதவிகள் வழங்கப்பட்டதாகவும் நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியுடன் நீண்டகால தொடர்பு இல்லாத பலருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதும், தேர்தலுக்குப் பிறகு புதியவர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டதும் சீனியர்களின் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
சில எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பதவி கோரியும், தற்போதைய அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர் பதவிகளை எதிர்பார்த்தும் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில், வெளியில் இருந்து இணைந்தவர்களுக்காக மாவட்ட அமைப்பில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளதால், தற்போதைய நிர்வாகிகள் மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து தவெகவில் இணைந்த முக்கிய நிர்வாகிகள் தங்களுக்கு இன்னும் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை என அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
"பொறுப்புகள் இல்லாமல் எவ்வாறு அரசியல் பணிகளை முன்னெடுப்பது?" என்ற கேள்வியை எழுப்பி, உடனடியாக கட்சிப் பொறுப்புகள் அல்லது வாரியப் பதவிகளை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாற்றுக் கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு உடனடியாக பதவிகள் வழங்கப்பட்டால், ஆரம்பம் முதல் கட்சிக்காக உழைத்த சீனியர்கள் கடும் அதிருப்தி அடையக்கூடும் என உளவுத்துறை அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தற்போது புதியவர்களுக்கு பதவிகளை வழங்குவது தொடர்பாக தலைமை எச்சரிக்கையுடன் அணுகி வருவதாகவும், பொறுப்புகள் வழங்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருபுறம் சீனியர் நிர்வாகிகளின் அதிருப்தி, மறுபுறம் மாற்றுக் கட்சியிலிருந்து வந்தவர்களின் பதவி கோரிக்கை ஆகிய இரண்டிற்கும் இடையே தவெக தலைமை சிக்கலில் சிக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
கட்சிப் பொறுப்புகளும், வாரியப் பதவிகளும் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இந்த உள்கட்சி அதிருப்தி அடுத்த கட்டத்தில் பெரிய சவாலாக மாறுமா என்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
English Summary
Intense squabbling over posts within TVK AIADMK VIPs frustrated with the party What does the intelligence report say