உதயநிதி சொத்து குறித்த விவரங்களில் முரண்பாடுகள்; வருமான வரித்துறை இடைக்கால அறிக்கை தாக்கல்..!
Income Tax Department files interim report regarding discrepancies in details of Udhayanidhis assets
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த சட்டமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களுக்கும், கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது தாக்கல் செய்த சொத்து விவரங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக கூறி உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வாக்காளரான குமாரவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
2020 ஆம் ஆண்டுக்கு முன் 02 கோடி ரூபாய் வருமானம் இருந்ததாக குறிப்பிட்டிருந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது 10 கோடியே 98 லட்சம் ரூபாய் வருமானம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். வருமானம் மற்றும் சொத்து அதிகரித்தது குறித்து உரிய விளக்கங்கள் தெரிவிக்கப்படவில்லை என்பதால், விசாரணை நடத்துமாறு வருமானவரித் துறைக்கும், கார்ப்பரேட் விவகாரத் துறைக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் வருமான வரித்துறை தரப்பில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், உதயநிதியின் வருமான வரி கணக்கு விவரங்கள் மட்டுமே தங்கள் வசம் இருப்பதாகவும், கூடுதல் ஆதாரங்களை சேகரிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, வருமான வரித்துறைக்கு 04 வாரங்கள் அவகாசம் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து சென்னை மயிலாப்பூர் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தமிழிசை சௌந்தராராஜன் தாக்கல் செய்த வேட்பு மனுவில் கூறியுள்ள வருவாய் ஆதாரங்கள், நிதி விவரங்கள் மற்றும் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய வருமான வரித்துறைக்கு உத்தரவிடக் கோரி தொகுதி வாக்காளர் கௌதம் சிவா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையையும் தலைமை நீதிபதி அமர்வு 04 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Income Tax Department files interim report regarding discrepancies in details of Udhayanidhis assets